பொளந்தெடுத்த வெயில்! 17 இடங்களில் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்தது.. டாப்பில் கரூர் பரமத்தி!
சென்னை: தமிழகத்தில் இன்று 17 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்திருக்கிறது. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 111 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழகம்: தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில்தான் வெயில் அதிகரிக்கும். ஆனால், இந்த முறை பிப்ரவரி இறுதியிலேயே வெயில் வாட்ட தொடங்கி விட்டது. கடந்த ஆண்டு பருவமழை ஓரளவு கை கொடுத்தாலும், இந்த ஆண்டின் கோடை காலம் வறட்சியை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

100 டிகிரி ஃபாரன்ஹீட்: இதன் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மழை குறித்து மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் வெயிலின் தீவிரம் குறையவில்லை. நேற்று மட்டும் 21 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை கடந்திருக்கிறது. அதேபோல இன்று 15 மாவட்டங்களுக்கு அதீத வெப்ப அலை குறித்து ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் கொடுத்திருந்தது.
வறண்ட வானிலை: மேலும் இன்று மதியம் வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பில், "தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மழை: மே 3 முதல் 6 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை: இன்று தொடங்கி 6ம் தேதி வரை அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2°-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். வட தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3°-5° செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருக்கக்கூடும்.
நாளை: இன்றும் நாளையும் வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். மே.4ம் தேதி தொடங்கி 6ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று 17 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகியுள்ளது. அதாவது,
கரூர் பரமத்தி - 111.74
ஈரோடு - 111.2
வேலூர் - 110.48
திருச்சி - 108.86
தருமபுரி - 108.5
திருத்தணி - 108.14
சேலம் - 107.96
திருப்பத்தூர் - 107.96
மதுரை நகர் - 107.6
நாமக்கல் - 107.6
மதுரை விமான நிலையம்- 107.06
பாளையங்கோட்டை - 104.9
சென்னை மீனம்பாக்கம் - 104
தஞ்சாவூர் - 104
கோவை - 103.1
நாகப்பட்டினம் - 102.2
காரைக்கால் - 100.58
சென்னை நுங்கம்பாக்கம் - 100.22
என வெயில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications