வெளுத்து வாங்கும் கனமழை.. இனி நிற்காது.. நைட் முழுக்க கொட்ட போகுது.. 21 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்பம் ஒரு பக்கம் அதிகரித்து வரும் சூழலில், மறுபுறம் மாலை நேரங்களில் ஓரளவுக்கு மழையும் பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான ஒரு வானிலை ஏற்படுகிறது. இதற்கிடையே இரவு 10 மணி வரை தமிழகத்தில் 21 மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரித்தே வருகிறது. அதிலும் இப்போது அக்னி நட்சத்திரமும் தொடங்கிவிட்ட நிலையில், வெப்பம் உச்சத்தில் இருக்கிறது. இதனால் மதிய நேரங்களில் வெளியே செல்வது மட்டுமின்றி வீட்டில் இருப்பதே கஷ்டமாக மாறி வருகிறது. இதனால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

21 மாவட்டங்களில் மழை
அதிலும் சென்னை போன்ற கடலோர மாவட்டங்களில் ஈரப்பதம் சேர்ந்து கொள்வதால் பதிவாகும் வெப்பத்தை விட மக்கள் உணரும் வெப்பம் அதிகமாக இருக்கிறது. இதனால் மக்கள் சிரமத்தைச் சந்தித்து வந்தனர். அதேநேரம் கோடை வெயிலுக்கு நடுவே குளிர்ச்சியைத் தரும் வகையில் அவ்வப்போது நல்ல மழையும் பெய்து வந்தது. இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 21 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப் போவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எங்கெல்லாம் மழை
அதாவது இரவு 10 மணி வரை தமிழகத்தில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையால் சாலைகளில் நீர் தேங்கலாம் என்றும் டிராபிக் பாதிப்பும் கூட ஏற்படலாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெயில் டூ மழை
இன்று பகல் காலை வேலூர், திருச்சி, மதுரை, திருத்தணி மாவட்டங்களில் தான் அதிகபட்ச வெப்பம் பதிவாகி இருந்தது. குறிப்பாக வேலூரில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதேபோல திருச்சி, மதுரை, திருத்தணியில் 104 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்தது. இந்தச் சூழலில் தான் மாலை கிளைமேட் மொத்தமாக மாறிவிட்டது. பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கும் சூழலில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான ஒரு வானிலை ஏற்பட்டுள்ளது.
வானிலை மையம்
முன்னதாக இன்றைய தினம் வானிலை மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "தென்னிந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டலக் கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்குத் திசைக் காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 4) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications