அசாமை புரட்டிப்போட்ட வெள்ளம்.. தத்தளிக்கும் மக்கள்! இதுவரை 84 பேர் பலி.. மீட்புப்பணிகள் தீவிரம்
திஸ்பூர்: அசாமில் பெய்த கனமழையில் சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதுவரை 84 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மீட்புத்துறை தெரிவித்திருக்கிறது.
இந்தியாவில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 1ம் தேதிதான் தொடங்கும். ஆனால் இந்த முறை மே மாதம் 30ம் தேதியே மழை தொடங்கிவிட்டது. கேரளம் தொடங்கி மத்திய இந்தியா வரை ஒரு கிளையாகவும், மேற்கு வங்கம் தொடங்கி வடகிழக்கு மாநிலங்கள் வரை இரண்டாவது கிளையாகவும் பருவமழை மழையை கொடுக்கிறது. அந்த வகையில் தற்போது அசாம் மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.

கனமழை காரணமாக அசாமில் 19 மாவட்டங்கள் கடுமையாக பாதிப்படைந்திருக்கிறது. மொத்தமாக 6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தற்போது வரை 84 பேர் உயிரிழந்துள்ளனர். ஜோர்ஹாட் மாவட்டத்தில் உள்ள நெமதிகாட்டில் பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. இதுபோல 8 ஆறுகளில் வெள்ளம் அதிகரித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமான நடைபெற்று வருகின்றன.
நகோன் மாவட்டத்தில் வெள்ளத்தின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இங்கு 20,000 குழந்தைகள் உட்பட 70,000 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இம்மாவட்டத்தை சேர்ந்த உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில், "நாங்கள் அன்றாடம் கூலி வேலை செய்து வருகிறோம். இப்படி இருக்கையில் இந்த பெருமழை வெள்ளம் எங்கள் வாழ்வாதாரத்தை பாதித்திருக்கிறது. வீடுகளில் வெள்ளம் தேங்கியதால் மேடான பகுதியில் தங்கியிருக்கிறோம். இந்த நிலைமை இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரியவில்லை.
உணவு மட்டும் மீட்பு படையினரால் கிடைக்கிறது. இருப்பினும் இயல்பு நிலை திரும்பினால்தான் எங்களால் இங்கு தொடர்ந்து வாழ முடியும்" என்று கூறியுள்ளார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் குறித்து அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
"கம்ரூப், கோலாகாட், மஜூலி, லக்கிம்பூர், கரீம்கஞ்ச், கச்சார், தேமாஜி, மோரிகான், உடல்குரி, திப்ருகார், டின்சுகியா, நாகோன், சிவசாகர், தர்ராங், நல்பாரி, சோனித்பூர், தவாம்பூர், கம்ரூப், கோலாகாட், மஜூலி, லக்கிம்பூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 6,44,128 பேர் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். 84 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் மட்டுமின்றி வன விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. காரசிங்கா தேசிய பூங்காவில் வெள்ளம் புகுந்ததால் பல விலங்குகள் மலைகளில் தஞ்சம் புகுந்துள்ளன. அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்திருப்பதால் நிலைமை மோசமடையாமல் பாதுகாக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம்" என்று கூறியுள்ளது.
மீட்பு பணிகள் குறித்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாவுடன் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர். மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக மோடி கூறியுள்ளதாக பிஸ்வா தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications