பெங்களூரை மொத்தமாக நனைத்த மழை! உள்ளம் குளிர்ந்த மக்கள்.. 5 மாதங்களுக்கு பிறகு நிம்மதி பெருமூச்சு
பெங்களூர்: குடிநீர் பஞ்சம் என தத்தளித்து வந்த பெங்களூரில் 5 மாதங்களுக்கு பிறகு தற்போது மழை பெய்திருக்கிறது. அடுத்து வரும் நாட்களிலும் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
இந்தியாவின் டெக் நகரமான பெங்களூர் தற்போது தண்ணீரின்றி தவித்து வருகிறது. ஒட்டுமொத்த கர்நாடக மாநிலத்தை பொறுத்த அளவில் 236 தாலுகாக்களில் 223 தாலுகாக்கள் வறட்சியால் தத்தளிக்கின்றன, அவற்றில் 219 மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். வழக்கமாக இதுபோன்ற வறட்சி காலங்களில் தனியார் டேங்கர் லாரிகளை மக்கள் நாடுவார்கள். ஆனால் இந்த முறை தனியார் டேங்கர் உரிமையாளர்களே தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.

பெங்களூரில் 14,000 ஆழ்துளை கிணறுகளிலிருந்து, 4000 டேங்கர் லாரிகள் தண்ணீரை எடுத்து சப்ளை செய்கின்றன. ஆனால் இந்தமுறை சுமார் 7000 ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டன. எனவே மொத்த தண்ணீர் விநியோகத்தில் 50 சதவிகிதம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் டேங்கர் லாரி தண்ணீரின் விலையும் உயர்ந்திருக்கிறது. எப்போதும் ஒரு டேங்கர் லாரி தண்ணீர் ரூ.500-600 வரை விற்பனையாகும். ஆனால் தற்போது ரூ.2000ஆக இது உயர்ந்திருக்கிறது.
பெங்களூருக்கு ஒவ்வொரு நாளும் 260 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில் 147 கோடி லிட்டர் காவிரி ஆற்றிலிருந்து பெறப்படுகிறது. அதேபோல 65 கோடி லிட்டர் ஆழ்துளை கிணற்றிலிருந்து கிடைக்கிறது. மொத்தம் சேர்த்தால் 210-212 கோடி லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. எனவே 50 கோடி லிட்டர் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது என அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் ஏறத்தாழ 5 மாதங்களுக்கு பிறகு தற்போது பெங்களூரில் மழை பெய்திருக்கிறது. இது குறித்து பெங்களூர் மக்கள் கூறுகையில், “கடைசியாக நாங்கள் நவம்பர் 21ம் தேதி மழையை பார்த்தோம். அதன் பின்னர் இப்போதுதான் மழை பெய்கிறது. இந்த முறை கோடை காலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் வெப்பம் பதிவாகியிருந்தது. பலர் குடிநீர் பிரச்னையாலும், வெயிலின் தாக்கத்தாலும் பெங்களூரிலிருந்து வெவ்வேறு நகரங்களுக்கு சென்றுவிட்டனர்.
இப்போது பெய்திருக்கும் மழை நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. இதேபோன்று மழை தொடர்ந்தால் பெங்களூர் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பிடும். எங்களுடைய எதிர்பார்ப்பும் இதுதான்” என்று கூறியுள்ளனர்.
தற்போது பெய்திருப்பதை போன்று அடுத்து வரும் நாட்களிலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். எனவே பெங்களூர் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications