விஸ்வரூபம் எடுக்கும் மழை.. கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட் வார்னிங்.. அவசர உதவி எண்கள் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. கோவை, நீலகிரியில் மழை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நீலகிரியில் மின்சாரம் தொடர்பான பாதிப்பு இருந்தால் 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நேற்று முன் தினம் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று காலை 5.30 மணி அளவில், மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ரத்னகிரிக்கு வடக்கு-வடமேற்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் நகர்ந்தது.

ரெட் அலர்ட் எச்சரிக்கை
ரத்னகிரி மற்றும் தபோலிக்கு இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடந்தது. இதன் காரணமாகவும், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும் என்பதாலும், தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
28 ஆம் தேதி வரை
வரும் 27 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 28 ஆம் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக நேற்று வானிலை மையம் கூறியிருந்தது.
சுற்றுலா தலங்கள் மூடல்
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு 2 நாட்கள் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், மழைக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. நீலகிரியில் உதகையில் முன்னெச்சரிகையாக பல சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உதவி எண்கள்
மேலும் நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதிப்பு ஏற்பட்டால், அவரச உதவிக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 1077 என்ற எண்ணை தொடர்பு கொண்டு அவசர உதவியை பெறலாம். இதேபோன்று நீலகிரியில் மின்சாரம் தொடர்பான பாதிப்பு இருந்தால் 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். கோவை மாவட்டத்திலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன என்று அம்மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மீட்புப் படை குழுவினர் கோவை, நீலகிரிக்கு சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications