ஒருபக்கம் ஆலங்கட்டி.. இன்னொரு பக்கம் சூறைக்காற்று.. வேலூரை புரட்டியெடுத்த கோடை மழை.. மக்கள் ஹேப்பி
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுத்த நிலையில் இன்று திடீரென்று சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் காட்பாடியில் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் முதல் வெயில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வடக்கு உள்மாவட்டங்களில் வெப்பஅலை வீசி வருகிறது. பிற இடங்களிலும் வழக்கத்தை விட அதிகளவில் வெயில் வெளுத்து வாங்குகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றன.

அதேபோல் வேலூர் மாவட்டத்திலும் தொடர்ந்து வெயில் என்பது அதிகரித்துள்ளது. 107 பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இருப்பினும் கடந்த 2 நாட்களாக வேலூரில் மழை பெய்து வருகிறது.
அதன்படி கடந்த 2ம் தேதி குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதிகளி்ல மழை பெய்தது. சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் தான் இன்று வேலூர் மற்றும் காட்பாடியில் மாலை நேரத்தில் மழை பெய்தது. சூறைக்காற்றுடன் இந்த மழை பெய்தது. காட்பாடியில் ஆலங்கட்டி மழை பதிவானது.
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதேவேலையில் மழையின் போது வீசிய சூறைக்காற்றால் சில இடங்களில் சேதம் ஏற்பட்டது. அதன்படி வேலூர் ரங்காபுரத்தில் சூறைக்காற்றும் மழை வெளுத்து வாங்கியபோது மரங்கள் வேரோடு சாய்ந்து மின்கம்பங்கள் மீது விழுந்தன. இதனால் மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதன் காரணமாக ரங்காபுரத்தில் மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் இன்று அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயில் தொடங்கியது. இந்த காலத்தில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் கத்தரி வெயிலின் முதல் நாளிலேயே வேலூரில் கோடை மழை பெய்துள்ளதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications