தென் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. அணைகளின் நீர் இருப்பு எவ்வளவு தெரியுமா? விவரம் இதோ
நெல்லை: தென் மாவட்டங்களில் வரும் 30, 31ம் தேதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகளில் நீர்மட்டம் எவ்வளவு உள்ளது என்பது குறித்து ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் பேய் மழை கொட்டியது. இடைவிடாது கொட்டி தீர்த்த இந்த கனமழையால் தென் மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. காரையார், பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளின் நீர் மட்டம் கிடு கிடுவென உயர்ந்தது. இதனால், தாமிரபரணி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டது.

இதன் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர கிராமங்களில் வெள்ளம் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. மழை விட்டு 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில் தற்போதும் கூட தூத்துக்குடி மாவட்டத்தில் சில இடங்களில் இயல்பு நிலை திரும்பவில்லை.
தற்போது நெல்லையில் இயல்பு நிலைக்கு திரும்பி மக்கள் தங்களது அன்றாட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று காலை கனமழை பெய்தது. மணிமுத்தாறு அணையின் மேல் பகுதியில் உள்ள மாஞ்சோலை (58 மி.மீ), காக்காச்சி (160 மி.மீ) , நாலுமுக்கு (150), ஊத்து(160) ஆகிய பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது.
பாபநாசம் அணை, சேர்வலாறு அணை பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. ஏற்கனவே அணைகள் நிரம்பி இருப்பதால் பாபநாசம், மணிமுத்தாறு மற்றும் சேர்வலாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கும் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது. நேற்று காலையில் இந்த அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
நேற்று மாலை 3 மணி நிலவரப்படி பாபநாசம் கீழ் அணை வழியாக வினாடிக்கு 2,104 கன அடி தண்ணீரும், மணிமுத்தாறு அணையில் இருந்து வினாடிக்கு 2,986 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது. மேலும் தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி, ராமநதி அணைகளில் இருந்தும் வினாடிக்கு தலா 50 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் அனைத்தும் நெல்லை தாமிரபரணி ஆற்றில் கலந்து ஓடியதால் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
ஆற்றில் வினாடிக்கு 5,190 கனஅடி தண்ணீர் செல்கிறது. தண்ணீர் திறப்பு அதிகரிப்பு மற்றும் தாமிரபரணி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து இருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால், நீர்வரத்து அதிகரித்தாலும் அச்சப்பட வேண்டாம் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் வருகிற டிசம்பர் 30 மற்றும் 31ஆம் தேதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதனிடையே தன் மாவட்டங்களில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் திறந்து விடப்படும் நீரின் அளவு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம். 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் தற்போது 142 அடி நிரம்பியுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவுக்கு 1,191 கன அடியாகவும் நீரின் வெளியேற்றம் 1,928 கன அடியாகவும் உள்ளது.
சேர்வலாறு அணையின் மொத்த கொள்ளளவான 156 அடியில் 146 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்த அணையில் இருந்தும் வினாடிக்கு 1928 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மணிமுத்தாறு அணையில் இருந்து 2560 கன அடி நீர் திறக்கப்படுகிறது. தற்போது அணையின் நீர் மட்டம் 116.89 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளவு 118 அடியாகும். வடக்கு பச்சையாறு அணையில் இருந்து 1,700 கன அடி நீர் உள்ளது.












Click it and Unblock the Notifications