கவலையே வேண்டாம்.. ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்கும்.. பால்வளத்துறை அறிவிப்பு!
சென்னை: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பால் தங்கு தடையின்றி கிடைக்கும் என்றும் ஒவ்வொரு மாவட்ட பால் பண்ணையிலும் பால் பவுடர் 4,000 பாக்கெட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடதமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டி நகர்வதால் வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தது. சென்னைக்கு இன்று கனமழைக்கான எச்சரிக்கையும் நாளை (அக்டோபர் 15) மிக கனமழைக்கான எச்சரிக்கையும் நாளை மறுநாள் (அக்டோபர் 16) அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும் விடுத்துள்ளது.

அக்டோபர் 15, 16 ஆகிய 2 நாட்கள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்றும், வடதமிழக மாவட்டங்களான இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களிலும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன் காரணமாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடாக, கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள கடலோர மாவட்டங்களில் பால் மற்றும் பால் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க ஒவ்வொரு மாவட்ட பால் பண்ணையிலும் அரை கிலோ பால் பவுடர் 4000 பாக்கெட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 20 டன் பால் பவுடர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள கடலோர மாவட்டங்களில் பால் மற்றும் பால் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க ஒவ்வொரு மாவட்ட பால் பண்ணையிலும் அரை கிலோ பால் பவுடர் 4000 பாக்கெட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 20 டன் பால் பவுடர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 50,000 எண்ணிக்கையில், அரை லிட்டர் பால் (UHT) 90 நாட்கள் வரை கெடாமல் இருப்பு வைக்கக்கூடிய பால் சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி நகராட்சிக்குட்பட்ட ஆவடி, அண்ணாசாலை, தியாகராய நகர், பூந்தமல்லி, மாதவரம், விருகம்பாக்கம், நங்கநல்லூர், வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லூர் உள்ளிட்ட ஆவின் மண்டல அலுவலகங்களில், தலா 1000 கிலோ வீதம், 9000 கிலோ பால் பவுடர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், கால்நடை தீவனம் சுமார் 500 டன் மற்றும் தாது உப்பு கலவை சுமார் 50 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக, ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications