பார்த்து பார்த்து பெய்யும் பருவமழை.. இது பத்தாது! 'இதுக்கு' ரெடியா இருங்க.. எச்சரிக்கும் ஆய்வாளர்கள்
சென்னை: இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு பருவமழை குறைந்திருக்கிறது என காலநிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதன் காரணமாக நாடு விலைவாசி உயர்வை சந்திக்கும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் பருவமழையை நம்பிதான் இந்தியாவின் பொருளாதாரம் இருக்கிறது. பயிர்களுக்கு, கால்நடைகளுக்கு, மின் உற்பத்தி, ஆறு, குளங்களுக்கான 70 சதவிகித நீர் பருவமழை மூலம்தான் கிடைக்கப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு எதிர்பார்த்ததைவிட பருவமழை குறைந்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஜூன்-செப்டம்பர் வரை பெய்யும் பருவமழையில் சுமார் 8 சதவிகிதம் வரை குறைந்திருக்கிறது. இதுபோன்று கடைசியாக கடந்த 2015ம் ஆண்டுதான் குறைந்திருந்தது.

இந்த ஆகஸ்ட் மாதம் முன்னெப்போதும் இல்லாத அளவில் மிகவும் வெப்பம் மிகுந்ததாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதன் காரணமாக அரிசி, கோதுமை மற்றும் சர்க்கரை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். தற்போது வரை நம்முடைய நாடு அரிசி, கோதுமை மற்றும் சர்க்கரை உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இருக்கிறது. இப்படி இருக்கையில் இந்த உற்பத்தி பாதிக்கப்பட்டால் விலைவாசி, உணவு பணவீக்கம் கடுமையாக அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த மழை குறைவுக்கு காரணம் எல்-நினோ என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்திலேயே எல்நினோ பாதிப்பு குறித்து அவர்கள் எச்சரித்திருந்தனர்.
உலகின் மிகவும் பெரிய கடலான பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியா-ஆசியா பகுதியில் ஆண்டுதோறும் சூடான காற்று மேலெழும் அதேபோல அதற்கு எதிர் திசையில் உள்ள அமெரிக்க பகுதியில் உள்ள பசிபிக் கடலில் குளிர்ச்சியான காற்று மேலெழும் இந்த இரண்டும் ஒரு கடத்தில் ஒன்று கலந்து வானிலையை இயல்பாக வைத்திருக்கும். இந்த காற்றுதான் வெறும் 21 சதவிகிதம் உள்ள நிலப்பரப்பில் மழைபொழிவை உருவாக்குகிறது. ஆனால் இந்த இரண்டு பசிபிக் கடல் பகுதியிலும் ஏதேனும் ஒரு பகுதியில் காற்று உருவாவது தடைபட்டுவிட்டால் வானிலையில் மாற்றம் ஏற்படும்.
இப்படி ஏற்பட்ட தடை காரணமாக கடந்த 2016ம் ஆண்டு எல் நினோ உருவானது. அந்த ஆண்டுதான் அதிக அளவு வெப்பம் பதிவானது. இந்த வெப்பம் காட்டுத்தீ, வறட்சி என ஏராளமான பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. இதேபோல இந்த ஆண்டும் எல் நினோ உருவாக வாய்ப்பிருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிகஸ் காலநிலை மாற்ற சேவையின் இயக்குநர் கார்லோ புன்டெம்போ இந்த ஆண்டு தொடக்கத்தில் எச்சரித்திருந்தார். மேலும், இது தெற்கு ஆசியாவைதான் அதிகம் பாதிக்கும் என்றும் கூறியிருந்தார். இவரது கூற்றை உறுதி செய்யும் வகையில் தற்போது இந்தியாவில் பருவமழை குறைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications