பேருந்து நிலையத்தை விழுங்கிய வெள்ளம்.. களமிறக்கப்பட்ட படகுகள்! நெல்லை ஜங்சன் நிலையை பாருங்க
திருநெல்வேலி: தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்துள்ளதால் திருநெல்வேலி ஜங்சன் பேருந்து நிலையம் முற்றிலுமாக மழையில் மூழ்கியுள்ளது. மீட்பு பணிகளுக்காக படகுகள் களமிறக்கப்பட்டிருக்கின்றன.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்த நான்கு மாவட்டங்களும் தமிழகத்திலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. மின்சாரம், குடிநீர் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். கிராமப்புறங்களை விட நகர் பகுதிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

வழக்கமாக தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் தனியார் பேருந்துகள், இந்த மழை வெள்ளம் காரணமாக தென் மாவட்டங்களுக்கான பேருந்து போக்குவரத்தை ரத்து செய்திருக்கின்றன. எனவே சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
திருநெல்வெலி ஜங்சன் வெள்ளத்தில் மூழ்கிய காட்சி#Tirunelveli pic.twitter.com/ER4Uoq76Lm
— Halley Karthik (@HalleyKarthik) December 18, 2023
4 மாவட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த 4 மாவட்டங்களிலும் அரசு அலுவலகங்களும் இன்று இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேநேரம் பால், குடிநீர் விநியோகம், உணவகங்கள், மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான ஏற்பாடுகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வெலி ரயில் நிலையம் வெள்ளத்தில் மூழ்கிய காட்சி pic.twitter.com/7L072PORos
— Halley Karthik (@HalleyKarthik) December 18, 2023
மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அலுவலர்களாக நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இன்று காலை 6 மணி நிலவரப்படி தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 93.2 செமீ மழையும், ஸ்ரீவைகுண்டத்தில் 61.8 செமீ மழையும், திருச்செந்தூரில் 67.9 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
திருநெல்வேலியில், மூலக்கரைப்பட்டி - 61 செ.மீ, நாங்குநேரி - 33 செ.மீ, மாஞ்சோலை - 55, ஊத்து - 50, நாலுமுக்கு - 47 செ.மீ, பாளையங்கோட்டை - 44 செ.மீ, அம்பாசமுத்திரம் - 43செ.மீ, சேரன்மகாதேவி - 41 செ.மீ, கன்னட அணைக்கட்டு - 41 செ.மீ, காக்காச்சி - 36 செ.மீ, நம்பியார் அணை - 36 செ.மீ, பாபநாசம் - 35 செ.மீ, மணிமுத்தாறு - 33 செ.மீ, களக்காடு - 32 செ.மீ, திருநெல்வேலி - 31 செ.மீ, கொடுமுடியாறு அணை - 30 செ.மீ, சேர்வலர் அணை - 27 செ.மீ, ராதாபுரம் - 27 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக ஜங்சன் பேருந்து நிலையம் முற்றிலுமாக மூழ்கியுள்ளது. இந்த மழை 1992ம் ஆண்டை நினைவுபடுத்துவதாக பலரும் கூறியுள்ளனர். அதாவது கடந்த 1992ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் புயல்வெள்ளம் ஏற்பட்டது. அந்த ஆண்டு நவம்பர் 13-ம் தேதி பாபநாசம் அணைப் பகுதியில் 310 மி.மீ. மழையும், சேர்வலாறு அணைப் பகுதியில் 210 மி.மீ., பாபநாசம் கீழ்அணைப் பகுதியில் 190 மி.மீ., மணிமுத்தாறு அணையில் 260 மி.மீ. என்று வரலாறு காணாத வகையில் மழை கொட்டியிருந்தது.
பேருந்து நிலையத்தை விழுங்கிய வெள்ளம்.. களமிறக்கப்பட்ட படகுகள்! நெல்லை ஜங்சன் நிலையை பாருங்க#Tirunelveli #TirunelveliRains pic.twitter.com/gAqlO0h1JH
— Halley Karthik (@HalleyKarthik) December 18, 2023
இந்த மழை காரணமாக திருநெல்வேலி சந்திப்பு பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 பேருந்துகள் வெள்ளத்தில் மூழ்கின. கொக்கிரகுளத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினுள் தண்ணீர் புகுந்தது. திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் த.மு.சாலை வரை கடைகள் வெள்ளத்தில் மூழ்கின. சிந்துபூந்துறை, கைலாசபுரம், மீனாட்சிபுரத்தில் அனைத்து குடியிருப்புகளும் வெள்ளத்தில் தத்தளித்தன. எத்தகைய வெள்ளத்திலும் நிலைகுலையாமல் இருந்த குறுக்குத்துறை முருகன் கோயிலின் மேல்தளத்தில் இருந்த ஓடுகளை வெள்ளம் அடித்துச் சென்றது. திருநெல்வேலி சந்திப்பில் தேங்கிய வெள்ளம் வடிய 4 நாட்களானது.
அப்படியொரு வெள்ளத்தை 31 ஆண்டுகளுக்கு பின்னர் தாங்கள் பார்த்திருப்பதாக மக்கள் கூறியுள்ளனர். சோஷியல் மீடியாக்களிலும் இது தொடர்பான படங்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications