போச்சு.. சென்னைக்கு அடுத்த அச்சுறுத்தல்! மழை நின்றும் தீராத துயரம் -உயிரையே பறிக்கும் மீலியாய்டோசிஸ்
சென்னை: சென்னையில் மிக்ஜாம் புயலால் கொட்டிய பெருமழையால் ஏற்பட்ட வெள்ளம் வடிந்து இருக்கும் நிலையில் தற்போது மீலியாய்டோசிஸ் என்ற பாக்டீரியா நோய் தொற்று மக்களை அச்சுறுத்தி வருகிறது. அது என்ன நோய்? விரிவாக பார்ப்போம்.
சென்னையில் மிக்ஜாம் புயலின் காரணமாக பெரு மழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தனர். இந்த நிலையில் தற்போது வெள்ளம் வடிந்துவிட்ட நிலையில் புதிய பிரச்சனை ஒன்றை சென்னை மக்கள் சந்தித்து வருகின்றனர். மழைக் காலங்களில் மண்ணிலிருந்து பரவும் 'மீலியாய்டோசிஸ்' என்ற அரிய வகை பாக்டீரியா தொற்று பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

போதிய விழிப்புணர்வு இன்றி சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால் தொற்று முக்கிய உறுப்புகளை செயலிழக்கச் வைத்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பெரு வெள்ளம் போன்ற பேரிடர் ஏற்பட்டு பிறகு 'மீலியாய்டோசிஸ்' எனப்படும் பாக்டீரியா தொற்று பரவ தொடங்குகிறது. விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு ஒரு சேர பரவும் இந்த தொற்று பாக்டீரியா வகையை சேர்ந்ததாகும். மண்ணுக்குள் உள்ள பல வகையான பாக்டீரியாக்களில் முக்கியமானதாக இருக்கும் 'பார்கோல்டெரியா ஸ்யூடோமேய்' எனப்படும் நுண்ணுயிரி மூலமாக இந்த 'மீலியாய்டோசிஸ்' தொற்று பரவுகிறது.
கால்கள், உடலில் காயமடைந்தவர்கள் மாசடைந்த நீரில் நடக்கும்போதும், தூய்மையற்ற குடிநீரை அருந்தும்போதும் 'மீலியாய்டோசிஸ்' தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல் அந்த பாக்டீரியாக்கள் பரவியுள்ள காற்றை சுவாசிக்கும்போதும் நோய் பாதிப்பு ஏற்படலாம். உடலில் பாக்டீரியா கிருமி ஊடுருவிய 2 வாரங்களில் அறிகுறிகள் தென்பட தொடங்குகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அண்மையில் பெய்த பெரு மழை மற்றும் வெள்ள பாதிப்பே தற்போது அங்கு 'மீலியாய்டோசிஸ்' நோய் பரவலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
அறிகுறிகள்:
- காய்ச்சல்
- உடல் சோர்வு
- தலைவலி
- மூட்டு வலி
- வயிற்றுப்போக்கு
- வாந்தி
- மூச்சுத் திணறல்
- இறுதியில் சிறுநீரக செயலிழப்பு

சிகிச்சை:
'மீலியாய்டோசிஸ்' தொற்றுக்கான சிகிச்சையில் ஆண்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், சிகிச்சையை தாமதிக்காமல் உடனே தொடங்குவது அவசியம்.
தவிர்ப்பது எப்படி?
- மழைக்காலங்களில் தேங்கிய நீரில் காயங்கள் உள்ள உடல் பாகங்கள் படாமல் பாதுகாக்கவும்.
- மாசடைந்த நீரை அருந்தாமல் தவிர்க்கவும்.
- குடிநீரை கொதிக்க வைத்து அருந்தவும்.
- வீட்டைச் சுற்றி உள்ள இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.
- காலணி அணியாமல் வெளியில் செல்வதை தவிர்க்கவும்.
- சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம்.












Click it and Unblock the Notifications