ரோட்டில் போன காரே மூழ்கிப்போச்சு.. பெங்களூரை புரட்டிப்போட்ட கனமழை! ஷாக் வீடியோ.. டிராபிக் மாற்றம்
பெங்களூர்: பெங்களூர் நகரில் நேற்று இரவு பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் எம்ஜிரோட்டை சுற்றிய பல இடங்களில் வெள்ளம்போல் மழைநீர் தேங்கி இருக்கிறது. இத்தகைய சூழலில் தான் மழைநீரில் ரோட்டில் போன காரே மூழ்கிப்போன ஷாக் வீடியோவை பெங்களூர் மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை என்பது போதிய அளவு பெய்யவில்லை என கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பெய்ய வேண்டிய மழையில் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் பல அணைகளில் நீர்மட்டம் என்பது சரிந்துள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாடு-கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீடு செய்து கொள்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் நேற்று பெங்களூர் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் திடீரென மழை பெய்தது.
அதாவது நேற்று இரவு முதல் பெங்களூர் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் லேசானது முதல் மிதமான அளவுக்கு மழை பெய்தது. பல இடங்களில் விட்டு விட்டும், சில இடங்களில் தொடர்ந்தும் இரவில் மழை பெய்தது. இதனால் இன்று காலையில் பெங்களூரில் பல சாலைகளில் தண்ணீர் தேங்கியது. தாழ்வான பகுதிகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி உள்ளது.
குறிப்பாக பெங்களூர் நகரின் மையப்பகுதியாக உள்ள எம்ஜி ரோட்டை சுற்றிய இடங்களில் மழைநீர் தேங்கியது. அதன்படி குயின்ஸ் சர்க்கிள், வின்ட்சர் மேனர் பாலம், கண்டோன்மென்ட் ரயில்வே சுரங்கபாதை, சேத்திரபுரம் நேரு சர்க்கிள், பல்லாரி ரோட்டில் உள்ள பிடிஏ ஜங்ஷன், ஜெயமஹாலில் உள்ள சிக்யூஏஎல் கிராஸ், மற்றும் பெங்களூர் எச்ஏஎல் விமான நிலையத்தின் அருகே குரோமா சர்வீஸ் ரோடு உள்ளிட்ட இடங்களில் உள்ள சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியிருந்தது.

குறிப்பாக பெங்களூர் எச்ஏஎல் விமான நிலையத்தின் அருகே குரோமா சர்வீஸ் ரோட்டில் சுரங்கப்பாதையில் மழைநீர் ஒரு காரை மூழ்கடித்து சென்றது. இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இதனால் பெங்களூர் மாநகர போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் சார்பில் இந்த சாலையை மக்கள் பயன்படுத்த வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. அதோடு இந்த சாலைக்கு பதில் பொதுமக்கள் பானத்தூர் ரயில்வே சப்-வேயை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த 24 மணநேரத்துக்கு பெங்களூர் நகரில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். அதேபோல் சில இடங்களில் மழையும், சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரில் அதிகபட்ச வெப்பநிலை என்பது 29 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 20 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications