சென்னை டூ குமரி வரை.. வரிசையாக 20 மாவட்டங்களுக்கு அலர்ட்.. கொட்டப்போகுது கனமழை!
சென்னை: சென்னை, திருவள்ளூர், மதுரை, நெல்லை, குமரி என 20 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த வாரத்தில் இருந்து ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது. வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மையத்தால் கனமழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து இரண்டு நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு இருந்ததாக கூறப்பட்ட நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து கரையை கடந்தது.

இதனால் கரையை கடக்கும் போது கூட மழை பெய்யவில்லை. இதையடுத்து தற்போது வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி இன்று தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இதேபோன்று, இன்று இரவு 7 மணி வரை சென்னை, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கடலூர், மதுரை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, நெல்லை, கன்னியாக்குமரி மற்றும் புதுச்சேரியில் லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று மதியம் வெளியிடப்பட்ட வானிலை அறிவிப்பில், இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், இராணிப்பேட்டை விழுப்புரம், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். தர்மபுரி, சேலம் கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை மறுநாள் தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
22 மற்றும் 23ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24ஆம் தேதி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம்,தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications