தீபாவளி அன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழ்நாடு வெதர்மேன், டெல்டா வெதர்மேன், வானிலை மையம் கூறுவது என்ன?
சென்னை: வடகிழக்கு பருவமழை காலம் என்பது அக்டோபரில் தொடங்கி ஜனவரி முதல் வாரத்தில் முடிகிறது. இதில் அக்டோபரில் ஆரம்பிக்கும் போது, முதல் சுற்று மழை தமிழ்நாடு முழுக்க பெய்யும். முதல் சுற்று மழை அக்டோபர் 2ம் வாரத்தில் அல்லது 3ம் வாரத்தில் தான் மிக அதிகமாக இருக்கும். இந்த சூழலில் அக்டோபர் 20ம் தேதி தீபாவளி வருகிறது. அன்றைக்கு மழை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் உள்ளது. இந்நிலையில் தீபாவளி அன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பது தொடர்பான முன் கூட்டிய வானிலை குறித்த அறிவிப்பை தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா நேற்று வெளியிட்டிருந்தார். அப்போது அவர் கூறும் போது, "தென்மேற்கு பருவமழை 16-ந் தேதி முதல் 18-ந்தேதிக்குள் இந்திய பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.

அதேசமயம் வளிமண்டல கீழடுக்கில் மேற்கு திசை காற்று வீசுகிறது. அது கிழக்கு வடகிழக்கு காற்றாக வீசும்போது, தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிடும். எனவே வருகிற 16-ந் தேதி முதல் 18-ந் தேதிக்குள் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கடந்த 15 ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெரும்பாலான ஆண்டுகள் இயல்பைவிட அதிகமாகவும், 2 ஆண்டுகள் இயல்பைவிட குறைவாகவும் பெய்துள்ளது. இந்த ஆண்டு வடமாவட்டங்களில் இயல்பாகவும், இயல்பைவிட அதிகமாகவும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதேநேரம் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் இயல்பாகவும், இயல்பைவிட குறைவாகவும் பதிவாக வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 50 செ.மீ. வரை மழை பெய்யும் என எதிர்பார்ப்பு உள்ளது. அதேநேரம் மிகத் துல்லியமாக இந்த இடத்தில் மழை பெய்யும் என்று கணிக்கும் நிலை என்பது தொடர்ந்து நமக்கு சவாலாகவே உள்ளது" இவ்வாறு கூறினார்.
இதனிடையே வடகிழக்கு பருவ மழை தொடங்கும் காலக்கட்டத்தில் தான் இந்த முறை தீபாவளி பண்டிகை வருகிறது. அதாவது வடகிழக்கு பருவ மழையின் முதல் சுற்று மழை ஆரம்பிக்கும் காலத்தில் தான் வருகிறது. இதனால் தீபாவளி வியாபாரத்தை நம்பியுள்ள வியாபாரிகள் கலக்கத்தில் உள்ளார்கள். பொதுவாக தீபாவளி தினத்தன்றும், அதற்கு முந்தைய நாளும் மழை இல்லாமல் இருந்தால் தீபாவளியை நம்பி இருக்கும் வியாபாரிகளுக்கு வியாபாரம் நன்றாக இருக்கும் என்பதால், மழை வரக்கூடாது என்று வேண்டாத வியாபாரிகளே இல்லை.
இதனிடையே ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தினத்தன்று மழை இருக்குமா? என்ற கேள்வி பலருக்கும் எழும். வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இதுபற்றி தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதாவிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த அவர், 5 நாட்கள் முன் கூட்டிய கணிப்பில்தான் அதனை சரியாக சொல்ல முடியும். எனவே இப்போது அதனை உறுதியாக சொல்ல முடியாது என்று கூறினார்.
அதேநேரம் தீபாவளி மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பிரதீப் ஜான் கூறுகையில், "அக்டோபர் 20-ந்தேதி (தீபாவளி பண்டிகை அன்று) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 2011-ம் ஆண்டு அக்டோபர் 26-ந்தேதி தீபாவளி தினத்தில் கனமழை கொட்டியது. வருகிற 17-ந்தேதி முதல் 21-ந்தேதிக்கு இடையில் காற்று சுழற்சி காரணமாக வட தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார்கள்.
டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறும் போது, தீபாவளி பண்டிகையையொட்டி வியாபாரிகளை பாதிக்கும் அளவுக்கு கனமழைக்கு வாய்ப்பு குறைவுதான் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனினும் ஓரிரு இடங்களில் கனமழையோ அல்லது இடி மின்னலுடன் வெப்பச்சலன மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார். அதேநேரம் புள்ளி விவரம் குறித்து கூறிய ஹேமச்சந்தர், கடந்த 20 ஆண்டுகளில் 2011-ம் ஆண்டில் மட்டும் தீபாவளி தினத்தில் கன மழை கொட்டியிருக்கிறது என்றார்கள்.












Click it and Unblock the Notifications