சென்னை டூ கன்னியாகுமரி.. 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அடுத்த 3 மணி நேரம் அலர்ட்
சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால், தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இன்று மதியம் 1 மணி வரை 15 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே புயல் குறித்த அச்சம் மேலெழுந்துவிடுகிறது. இந்த ஆண்டும் புயல் உருவாக சாத்தியமான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கக்கடலில் உருவாகியுள்ளது. இது மணிக்கு 30 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது எனவும், அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புயல் எச்சரிக்கை காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக நாகை மாவட்டத்தில் புயல் பாதிப்பு அச்சுறுத்தல் உள்ள பகுதியிலிருந்து மக்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.
தற்போதைய நிலவரப்படி புயல் சின்னம் சென்னையிலிருந்து 590 கி.மீ தொலைவிலும், நாகையிலிருந்து 400 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து 590 கி.மீ தொலைவிலும், புதுவையிலிருந்து 510 கி.மீ தொலைவிலும் , இலங்கையிலிருந்து 130 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் 2வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. அதேபோல முன்னெச்சரிக்கையாக சென்னை பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், காரைக்கால் அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவை செமஸ்டர் தேர்வுகளை ஒத்தி வைத்திருக்கிறது. தவிர பாலிடெக்னிக் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோடியக்கரையில் 17 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. வேதாரண்யம் 12 செ.மீ, திருவாரூர் 12 செ.மீ, தலை ஞாயிறு 10 செ.மீ, மரக்காணத்தில் 11 செ.மீ, தரங்கம்பாடி 10 செ.மீ, செங்குன்றத்தில் 8 செ.மீ என மழை பதிவாகியுள்ளது. இப்படி இருக்கையில் மதியம் 1 மணி வரை அதாவது அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை தொடங்கி டெல்டா மாவட்டங்கள் முதல் கன்னியாகுமரி வரை 15 மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications