சென்னை உட்பட 11 மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் கனமழை.. அடுத்த 2 மணி நேரம் உஷார்!
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெல்ல வட தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக வட தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை உட்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் மதியம் 1 மணி வரை விடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கத்திவாக்கத்தில் 6 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது. அதேபோல அண்ணா பல்கலைக்கழக பகுதியில் 5.1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

நேற்றைய வானிலை நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்காலிக புயலாக வலுப்பெற்று, மீண்டும் வலுவிழந்து வெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால், இன்று காலை நிலவரப்படி, புயலாகவே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது தற்போது காற்றின் வேகம் மணிக்கு 83 கி.மீ என அதிகரித்திருக்கிறது. இதனால் மழையின் தாக்கமும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்று மதியம் 2 மணிக்குள் புயல் உருவாகும் என்றும், இது நாளை பிற்பகல் மாமல்லபுரம், புதுச்சேரிக்கு இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
முன்னதாக நேற்று மழை குறித்து தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, “இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை ஓரிரு இடங்களில் அதி கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கன மழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
டிச.1ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்பட்டிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.'












Click it and Unblock the Notifications