அடுத்த 3 மணி நேரம்.. சென்னை, திருவள்ளூர் உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது மதியம் 1 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய ஆரம்பத்தில் குறைவான மழையே இருந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை சூடுபிடித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் நல்ல மழை பெய்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, நேற்று திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது மதியம் 1 மணி வரை தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது மதியம் 1 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழகத்தில் இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், தென்காசி, திருநெல்வேலி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று தெரிவித்து இருந்தது.












Click it and Unblock the Notifications