சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று சென்னை, செங்கல்பட்டு மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் மாலையில் பரவலாக நல்ல மழை பெய்திருந்தது. தற்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் மழை கொட்டும் என்கிற நிலை இருக்கிறது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது இதன் காரணமாக நேற்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படியே பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்திருந்தது.

அதன்படியே சென்னையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை நேற்று பெய்தது. எழும்பூர், சென்டிரல், பாரிமுனை, மெரினா, கிண்டி, ஆலந்தூர், சேப்பாக்கம், அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்ததால், வானிலையே குளுகுளுவென மாறியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் நேற்று மாலை நல்ல மழை பெய்திருந்தது.
இந்நிலையில் செனன்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில். தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை பெய்யும் என்றும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியிருந்தது. அதன்படியே எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாம் என்கிற நிலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. குளிர்ந்த காற்று பரவலாக வீசி வருகிறது.
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக, பள்ளமாக உள்ள சில இடங்களில் தண்ணீர் தேங்கலாம் என்றும், போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் சுட்டிக்காட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications