கலங்கிய மேகங்கள்.. சென்னை உட்பட 14 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை! அடுத்த 1 மணி நேரம் முக்கியம்
சென்னை: தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
கடந்த 16 மற்றும் 17ம் தேதிகளில் தென் மாவட்டங்களில் அதீத கனமழை கொட்டி தீர்த்ததால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் வெள்ள காடாக மாறின. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கு வரும் நீரின் அளவு வேகமாக உயர்ந்ததால் அதிலிருந்து அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இத்துடன் காட்டாற்றுப் பகுதிகளில் இருந்து ஓடி வந்த வெள்ள நீரும், சிற்றாற்று வெள்ளமும் தாமிரபரணி ஆற்றில் கலந்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதுவே இரண்டு மாவட்டங்களில் வெள்ளம் சூழ காரணம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கருங்குளம், ஆதிச்சநல்லூர், பொன்னன்குறிச்சி, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, முக்காணி, ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர், அகரம், பால்குளம், குரும்பூர், சோனகன்விளை, அம்மன்புரம் 100க்கும் அதிகமான கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் சுமார் 40 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர்.
வெள்ளத்தில் சில வீடுகள் இடிந்து விழுந்திருக்கின்றன. பைக்குகள், கார்கள், பேருந்துகள் என அனைத்து வகை வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. கால்நடைகள், மனித உயிரிப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக மழை வெள்ளம் இணைப்பு சாலைகளை அடித்து சென்றதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து இந்த இரண்டு மாவட்டங்களும் தற்போதுதான் மெல்ல மீண்டு வருகின்றன.
இந்நிலையில் அடுத்த 1 மணி நேரத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதாவது, “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, தேனி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி என 12 மாவட்டங்களில் இரவு 9.50 மணிக்குள் லேசான மழை பெய்யும். இதே செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்” என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது தவிர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. தென் மாவட்டங்களான கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
நாளையும், நாளை மறுநாளும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதேபோல புத்தாண்டு தினமான 1ம் தேதியும், அடுத்த நாளான 2ம் தேதியும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது என ஆய்வு மையம் எச்சரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications