அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகும் கோடை மழை! 7 மாவட்டங்களுக்கு பறந்தது மஞ்சள் அலர்ட்
சென்னை: தமிழகத்தை கோடை மழை குளிர்வித்து வந்த நிலையில், இடையில் வெயில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு கோடை மிக கடுமையாக இருந்தது. இந்த ஆண்டு இதே போல இருக்கும் என்று பயந்த நிலையில், வெயில் எதிர்பார்த்ததை போலவே தீவிரமாக இருந்தது. வழக்கமாக வட மாவட்டங்களை சுட்டெரிக்கும் வெயில் இந்த முறை கொங்கு மாவட்டங்களையும் சேர்த்து பதம் பார்த்தது. வேலூரை விட ஈரோட்டில்தான் அதிகம் வெயில் பதிவாகியிருந்தது.

இப்படி இருக்கையில் மே மாதம் தொடக்கத்தில் வானிலை அப்படியே மாறியது. தென் மாவட்டங்களில் முதலில் தலையை காட்டிய மழை, பின்னர் வட மாவட்டங்களையும் நனைக்க தொடங்கியது. குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. சென்னையில் பெரிய அளவில் மழை இல்லை என்றாலும், வட மாவட்டங்களில் மழை பெய்ததால் சென்னையில் ஓரளவு வெயில் குறைந்து காணப்பட்டது.
இது மே மாதமா அல்லது அக்டோபர், நவம்பர் மாதமா என்கிற அளவில் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. எனவே சென்னை மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருந்தனர். இப்படி இருக்கையில் தற்போது சென்னையில் வெயில் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் வெயில் பதிவாகி வருகிறது.
நேற்று சென்னை மீனம்பாக்கத்தில் 41.9 டிகிரி செல்சியஸ் (107 டிகிரி ஃபாரன்ஹீட்) வெயில் பதிவாகியிருந்தது. அதேபோல திருத்தணியில் 42.5 டிகிரி செல்சியஸ் (109 டிகிரி ஃபாரன்ஹீட்) அளவுக்கு வெயில் இருந்தது.
இன்றும் சென்னையில் வெயில் அதிக அளவில் பதிவாகும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருந்தார். இது தொடர்பாக x தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
"வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் வெயல் காலை 11 மணியளவில் 40 டிகிரி செல்சியஸை கடந்திருக்கிறது. சென்னை நுங்கம்பாக்கத்தை கடல்காற்று தாக்கியுள்ளது. அதேபோல மீனம்பாக்கத்தை கடல்காற்று தாக்க 90 நிமிடங்களை எடுத்துக்கொள்ளும். மீனம்பாக்கத்தில் வெயில் 42 டிகிரி செல்சிஸை தாண்டும். திருத்தணி 43 டிகிரியையும், வேலூர் 42 டிகிரி செல்சியஸையும் தாண்டும்" என்று கூறியிருந்தார்.
தற்போதைய நிலவரப்படி வேலூரில் அதிகபட்சமாக 109 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதாவது, தருமபுரி, சேலம், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகருக்கு மழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே இம்மாவட்ட மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications