அடுத்த 3 மணி நேரம்.. கோவை - குமரி வரை.. 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் ஜில் அப்டேட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை முதல் குமரி வரை 7 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து கோடைக்கால சீசன் தொடங்கியுள்ளது. பிப்ரவரி மாதத் தொடக்கத்திலேயே வெயில் பல்வேறு இடங்களில் சதமடித்து வந்ததால், கோடைக்காலத்தில் வெயில் எப்படி இருக்குமோ என்று மக்கள் அச்சமடைந்து இருந்தனர். அதே போலவே வெயில் தினம் தினம் வாட்டி வதைத்தது.

இன்று எங்கெல்லாம் மழைக்கு சான்ஸ்
இந்த நிலையில் தான் அவ்வப்போது மழை பெய்து கொஞ்சம் குளிர வைத்தது. இடையிடையே சில நாட்கள் மழையும், சில நாட்கள் வெயிலும் என மாறி மாறி கிளைமேட் இருந்து வருகிறது. இந்த நிலையில் வரும் 2 நாட்களுக்கு வெயில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும், அதே சமயம் வரும் 27 ஆம் தேதி வரை மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
அதன்படி இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. கோவை, தேனி, விருதுநகர், தென்காசி, குமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்தது. காலையில் வெயில் அடித்து வந்த நிலையில் மதியத்திற்கு பிறகு மேற்கண்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
அடுத்த 3 மணி நேரத்தில்
இது தொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 10 மணி வரை கோவை மாட்டத்தில் ஒருசில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதேபோன்று தென்காசி, குமரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த ஒரு வாரத்திற்கான வானிலை முன்னறிவிப்பினை வெளியிட்டிருந்தது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:- "தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. எனவே, இன்றும், நாளையும் (22-04-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் 2 நாட்களுக்கு எப்படி
23-04-2025 முதல் 27-04-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (21-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 முதல் 30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை (22-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 முதல் 30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை:
* அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை, 21-04-2025 முதல் 25-04-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஓரிரு இடங்களில் சற்று உயரக்கூடும்.
* இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப வேறுபாடு: 21-04-2025 முதல் 25-04-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
* 21-04-2025 முதல் 25-04-2025 வரை: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
கோவில்பட்டியில் 3 செமீ மழை
"கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் நிலவரத்தை பொறுத்தவரை, தென்தமிழகம் மற்றும் வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்சமாக கோவில்பட்டி (தூத்துக்குடி) 3 செ.மீ, இளையாங்குடி (சிவகங்கை) 2செ.மீ, கமுதி ARG (ராமநாதபுரம்) 1செ.மீ என மழை பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை நிலவரம்:
* அதிகபட்ச வெப்பநிலையாக வேலூரில் 40.2° செல்சியஸ் பதிவாகியிருக்கிறது. குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்) கரூர் பரமத்தியில் 23.0° செல்சியஸ் பதிவாகியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 1-2° செல்சியஸ் உயர்ந்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை.
* தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருந்தது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.
* தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37-40° செல்சியஸ், தென்தமிழக கடலோரப் பகுதிகளில் 34-36° செல்சியஸ், வடதமிழக கடலோரப்பகுதிகள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35-38° செல்சியஸ், மலைப்பகுதிகளில் 21-28° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
* மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் & அரபிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 25 ஆம் தேதி வரை எச்சரிக்கை ஏதுமில்லை" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கும் வெயிலும் அடிக்கும் மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியிருக்கிறது. இன்று பெரும்பாலான இடங்களில் வெயிலே அடித்தது. குமரி, விருதுநகர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்தது.












Click it and Unblock the Notifications