சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை! ஐடி ஊழியர்கள் WFH செய்ய அட்வைஸ்
சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்டோபர் 15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். அது போல் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் நாளை (அக். 15 முதல் வரும் 18ஆம் தேதி வரை வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது சென்னை அருகே நிலை கொள்ளும் என்பதால் அதிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் சென்னையில் 20 செ.மீருக்கு மேல் மழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அக்டோபர் 15-ஆம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது.
தென் கிழக்கு வங்கக் கடலில் இன்று காலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 17ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது.
இந்த கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், காவல் துறை டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மழை நீர் வடிகால் பணிகள், தூர்வாரும் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை தொடர்பாக எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் நாளை அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவுறுத்தலை அடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் விடுமுறையை பயன்படுத்திக் கொண்டு நீர் நிலைகள், சுற்றுலா தலங்களுக்கு செல்லாமல் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கக் கூடிய பகுதிகளில் மீட்பு படகுகள் இன்றே நிலை நிறுத்தப்பட வேண்டும். மழை வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்படும் போது மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications