கிளம்புங்க சென்னை மக்களே.. பெரிய மழை இல்லையாம்.. பேருந்துகள், மெட்ரோ ரயில் வழக்கம்போல இயங்கும்
சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் படிப்படியாக மழை குறைந்து வருவதாலும், தேங்கியுள்ள தண்ணீர் பல்வேறு பகுதிகளில் வடிந்து வருவதாலும் மாநகரப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல இயக்கப்படும் என்று சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம், மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே வியாழக்கிழமை கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டதால், திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரம் நோக்கிச் சென்றதால் சென்னையில் கடந்த இரு நாட்களாக பெய்த பலத்த மழை நேற்று இரவு முதலே படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வந்ததால் பல்வேறு சாலைகளில் மழை நீர் தேங்கியது. இதனால், பேருந்து போக்குவரத்து உள்ளிட்டவை துண்டிக்கப்பட்டிருந்தன.
தாழ்வான பகுதிகளான வேளச்சேரி, முடிச்சூர், தரமணி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து கடல்போலக் காட்சியளித்தது. பல பகுதிகளில் வீடுகளுக்கு மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். பொதுமக்கள் தங்கள் உடைமைகளுடன் பாதுகாப்பான பகுதிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளுக்குச் சென்றனர். பலர் முதல் தளத்திற்கு இடம்பெயர்ந்தனர். பல்வேறு பகுதிகளில் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத அளவிற்கு மழை நீர் தேங்கியது.
சென்னையில் அதிகப்படியான கன மழை பெய்த காரணத்தால், நேற்று மக்கள் அத்தியாவசிய சேவைகளுக்கு கூட வெளியில் போக முடியாத அளவிற்கு அவதிக்குள்ளாகினர். பல்வேறு சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், பல முக்கிய நெடுஞ்சாலைகளில் நெரிசல் அதிகமாக இருந்தது.
இந்நிலையில், தற்போது சென்னையில் மழையின் தீவிரம் குறைந்துள்ளது. சாலைகளில் தேங்கியிருந்த மழை நீர் வடியத் தொடங்கியுள்ளதால் ஒரு சில இடங்களைத் தவிர போக்குவரத்து மீண்டும் சீரடைந்து வருகிறது. சுரங்கப் பாதைகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, மாநகரில் பேருந்துகள் அனைத்தும் வழக்கம்போல இயக்கப்படும் என்று சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை மெட்ரோ ரயில்கள் இன்று காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை அனைத்து வழித்தடங்களிலும் வழக்கம்போல இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications