சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை! ஆனாலும் பாருங்க.. சென்னை மாநகராட்சி வெளியிட்ட போட்டோ!
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை என சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வழக்கம் போல் சுரங்கப்பாதை வழியாக பயணிக்க முடியும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலும் இப்போதே மழை தீவிரமடைந்துள்ளது. கோவையில் நேற்று பெய்த கனமழை காரணமாக தெருக்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. மதுரை, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை கொட்டியது.

சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் மழையின் அளவு அதிகரிக்கும் எனவும், நாளை மறுநாள் (அக்டோபர் 16) அதிகனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகள், சுரங்கப்பாதைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. ஆனால் உடனுக்குடன் அந்த நீர் வெளியேற்றப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சீர் செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் இரவு முதல் மழை பெய்து வரும் நிலையில் சென்னையில் உள்ள 21 சுரங்கப் பாதைகளிலும் வழக்கம்போல் வாகனங்கள் இயங்கி வருகின்றன. எந்த சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கவில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளின் தற்போதைய நிலை தொடர்பான சிசிடிவி காட்சிகளின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளது சென்னை மாநகராட்சி. அதன்படி, எந்த சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேங்கி இருக்கவில்லை.
மேலும் இன்று கனமழைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்திருக்கும் நிலையில் அதனை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி முழுவீச்சில் தயாராக உள்ளதாக மாநகராட்சி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications