சென்னை மழைநீர் வடிகாலுக்கு ரூ.4,000 கோடி இல்லை.. ரூ. 5166 கோடி.. சொல்கிறார் கே.என். நேரு
சென்னை: சென்னை மழைநீர் வடிகால்களுக்கு செலவிட்டபட்ட தொகை குறித்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கே.என். நேரு விளக்கமளித்துள்ளார். 'மழைநீர் வடிகால் பணிகளின் மதிப்பீடு ரூ.4,000 கோடி அல்ல. ரூ. 5166 கோடி என்றும் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் சென்னையையும் புறநகர் பகுதிகளையும் சூறையாடி விட்டு போய் விட்டது. கொட்டித்தீர்த்த பெரும் மழையால் சென்னையே தண்ணீரில் தத்தளிக்கிறது. செம்மஞ்சேரி, வேளச்சேரி, பள்ளிக்கரணை, பெரம்பூர், வியாசர்பாடி, கொளத்தூர், திருவொற்றியூர் உட்படச் சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. வளசரவாக்கம் பகுதியை விட்டு மக்கள் வெளியேறி வருகின்றனர்.

அதிகாரிகளும், பேரிடர் மீட்புக்குழுவினரும் தொடர்ந்து மழைநீரை வெளியேற்றுவதுடன் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லும் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில் சென்னை முழுவதும் பல பகுதிகளில் இன்னமும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
வளசரவாக்கத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் கடந்த 5 நாட்களாக மின்சாரம் இன்றியும் குடிக்க கூட தண்ணீர் இன்றியும் தவித்து வருகின்றனர். மழைநீர் வடிகால் பணிகள் 98 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. இரண்டு சதவீதம் மட்டுமே மீதம் உள்ளது என்று கடந்த நவம்பர் மாதம் 4ஆம் தேதியன்று கூறினார் கே.என். நேரு.
பெருவெள்ளம் சூழ்ந்துள்ள சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்கு செலவிட்ட தொகை என்னவானது என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர். சென்னையில் மழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதற்கு நிர்வாகத் திறமையற்ற திமுக அரசே பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரூ. 4,000 கோடி வடிகால் பணிகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
சென்னையின் வடிகால் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ஏறக்குறைய 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சீமானும் வலியுறுத்தியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், 4,000 கோடி ரூபாய்க்கு வடிகால் அமைக்காவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கக் கூடும் என்றும் அதிமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் எதுவும் அமைக்கப்படவில்லை எனவும் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், இது பற்றி மேலும் பேசி அரசியலாக்க விரும்பவில்லை என்று கூறினார். ஆனாலும் 4000 கோடி திட்டப்பணிகள் பற்றி சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனிடையே 4000 கோடி ரூபாய் எங்க போச்சு என்று கேட்டு அதற்கு தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் விளக்கம் அளித்திருந்தார் ஒரு திமுக அபிமானி.
1) Phase 1 கொசஸ்தலை பேசின் மொத்தம் நீளம்:769 KM பணிகள் முடிந்தது : 523 KM Progress:68% பட்ஜெட் :3220 கோடி
செலவிட்டது: 1903 கோடி.
2) Phase 2 கோவளம் பேசின் மொத்தம் நீளம் : 360 KM பணிகள் முடிந்தது : 128 KM Progress : 35% பட்ஜெட்: 1714 கோடி செலவிட்டது: 200 கோடி
3)Phase 3 SMDF மொத்த நீளம்: 60 KM பணிகள் முடிந்தது: 49 KM Progress: 81% பட்ஜெட் :232 கோடி செலவிட்டது: 187 கோடி. So total பட்ஜெட் 5166 கோடி
இதுவரை செலவிட்டது 2310 கோடி. பணிகள் முடிந்த ஏரியால இருந்து நீர் வெள்ள நீர் வேகமாக வடிஞ்சுருச்சு. பணிகள் முடியாத இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்கு.இந்த திட்டத்துக்கு செலவு செஞ்ச தொகை 2310 கோடி மட்டும் தான்... விரைவில் மீதி வேலைகளை தொடங்குவாங்க. இந்த மிக பெரிய திட்டத்தோட பணிகள் முழுசா முடிய 2024 - 25 ஆயிடும் என்றும் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்றைய தினம் பேட்டி அளித்துள்ள கே.என். நேரு, மழைநீர் வடிகால் பணிகளின் மொத்த மதிப்பீடு ரூ.5,166 கோடி. ஆனால் இதுவரை ரூ 2,191 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணிகள் மட்டுமே நிறைவடைந்திருக்கின்றன. மீதமுள்ள 3,000 ரூபாய் கோடிக்கானப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications