சென்னையில் அனைவருக்கும் ரூ.6000 வெள்ள நிவாரணம்.. ரேசன் கார்டு இல்லாவிட்டாலும் கவலையில்லை?
சென்னை: மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட 30 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், அரசுக்கு ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை செலவு ஏற்படும் என அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ரேசன் கார்டு இல்லாதவர்கள் வாடகை ஒப்பந்தம், கேஸ் சிலிண்டர் ரசீது இருந்தாலும் அதை வைத்து நிவாரணம் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயலின் தாக்கம் காரணமாக பெய்த பெரு மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில்
மிகப்பெரிய அளவில் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. மழை நின்று 8 நாட்கள் ஆன பின்னரும் புற நகர் பகுதிகளில் வெள்ளம் இன்னமும் வடியவில்லை. வெள்ளம் வடிந்தாலும் நகரின் பல பகுதிகளும் சேரும் சகதியுமாக காணப்படுகிறது. மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு பல நாட்கள் ஆகும்.

வெள்ள நீர் புகுந்த வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் வீணாகி விட்டது. தொலைக்காட்சி, ப்ரிட்ஜ், வாசிங் மெசின், இரு சக்கர வாகனங்கள், கார்கள் தண்ணீரில் மூழ்கி சேதமாகி விட்டன. உடமைகளை இழந்து பல லட்சம் பேர் தவிக்கின்றனர். வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் தலா 6 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
எப்போது பணம் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், 10 நாட்களுக்குள் வழங்கப்படும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிவாரணத் தொகை வழங்குவதற்கான டோக்கன் வரும் 16ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதனிடையே ரேசன் கடைகள் மூலம் வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளதால் ரேசன் கார்டுகள் இல்லாதவர்கள் என்ன செய்வது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே சென்னையில் உள்ள அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரேசன் கார்டுகள் இல்லாதவர்கள் வீட்டு வாடகை ஒப்பந்த பத்திரம், கேஸ் சிலிண்டர் ரசீது போன்றவைகளை பயன்படுத்தி வெள்ள நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம். இது குறித்த அரசாணையில் விபரங்கள் தெரிவிக்கப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications