சென்னையில் வெயில் கம்மி.. ஆனா வெப்பம்+ஈரப்பதம் அதிகம்! இதுதான் ரொம்ப டேஞ்சர்.. வெதர்மேன் வார்னிங்
சென்னை: சென்னையில் கடந்த 2 நாட்களாக வெயில் ஒப்பீட்டளவில் குறைவாகத்தான் இருக்கிறது என்றும், ஆனால் வெப்பமும், ஈரப்பதமும் சேர்ந்து உடலின் வெப்பநிலையை உயர்த்தும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார்.
இந்த சூழலை ஆங்கிலத்தில் வெட் பல்ப் என்று கூறுவார்கள். வெளியில் வெயில் பரவாயில்லை போன்று தோன்றும். இதனால் போதுமான அளவு நீரை நாம் எடுத்துக்கொள்ளாமல் தவிர்த்துவிடுவோம். ஆனால் கடைசியில் இதுவே பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

இது குறித்து தனது x தளத்தில் பதிவிட்டுள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், "கடந்த இரண்டு நாட்களில் பதிவான வெப்பத்தை விட இன்று அதிக வெயில் சென்னையில் இல்லை. ஆனால், அதிக ஈரப்பதம் இருந்ததால் உடலின் வெப்பம் அதிகரித்திருக்கிறது. இந்த வெட் பல்ப் காலநிலை இன்று சென்னையில் 31 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருந்தது" என்று கூறியுள்ளார்.
வெட் பல்ப் என்பது, நீங்கள் முழு ஈரத்துடன், உடல் முழுவதும் நனைந்துக்கொண்டு காற்றில் நிற்பதாகும். மனித உடல், வெப்பத்தையும் உணரும் அதே நேரம் ஈரபதமும் காற்றில் இருக்கும். சாதாரணமாக நாம் 38 டிகிரி செல்சியஸ் வெயிலில் இருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். காற்றின் ஈரப்பதம் 20% எனில், உடலிலிருந்து வெளியேறும் வியர்வை காற்றில் ஆவியாகிவிடும். எனவே உடல் குளிர்ச்சியடையும். வெளில் நமக்கு தெரியாது. ஏனெனில் மேலும் மேலும் வியர்வை ஆவியாகிக்கொண்டே இருக்கும் என்பதால் உடல் நிலையில் வெப்பம் சீராக இருக்கும்.
இதே வெயில் 34 டிகிரி செல்சியஸும், ஈரப்பதம் 80% ஆகவும் இருக்கும்போது உடலிலிருந்து வியர்வை வரும். ஆனால், அது ஆவியாகது. சட்டையில் ஒட்டிக்கொண்டே இருக்கும். இதனால் உடல் வெப்பம் குறையாது. இந்த சூழலில் வெயில் 30 டிகிரி அளவுக்கு இருந்தால் நம்மால் சமாளிக்க முடியாது. இந்த நேரத்தில் ஹீட் ஸ்ட்ரோக், ஹீட் ஸ்ட்ரஸ் போன்றவை ஏற்படக்கூடும். இதுவே 31 டிகிரியாக உயரும்போது நிலைமையை கையை மீறி போகும். 35 டிகிரியாக உயர்ந்தால் அது மனித உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த சூழலை தவிர்க்க வேண்டும் எனில் அதிக அளவில் நீரை குடிக்க வேண்டும், நிழலான இடத்தில் இருக்க வேண்டும். உடலில் ஒட்டும் வைகயிலான நைலான் ஆடைகளை அணிய கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
முன்னதாக வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "கடந்த 24 மணி நேரத்தில் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், இதர தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்)
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி) தலா 7,
துறையூர் (திருச்சிராப்பள்ளி), நடுவட்டம் (நீலகிரி) தலா 4,
சுருளக்கோடு (கன்னியாகுமரி) 3,
பாலமோர் (கன்னியாகுமரி), வெம்பக்கோட்டை (விருதுநகர்), தம்மம்பட்டி (சேலம்), களக்காடு (திருநெல்வேலி), சேரன்மகாதேவி (திருநெல்வேலி) தலா 2,
பெரியகுளம் (தேனி), உப்பாறு அணை (திருப்பூர்), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), சிற்றாறு-I (கன்னியாகுமரி), கள்ளக்குறிச்சி ARG (கள்ளக்குறிச்சி), பேச்சிப்பாறை AWS (கன்னியாகுமரி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), கிளன்மார்கன் (நீலகிரி), குடியாத்தம் (வேலூர்), தாதியங்கர்பேட்டை (திருச்சிராப்பள்ளி), திருப்பூர் AWS (திருப்பூர்), அடையாமடை (கன்னியாகுமரி), மேலாலத்தூர் (வேலூர்), குண்டடம் (திருப்பூர்) தலா 1.
வெப்பநிலை நிலவரம்:
அதிகபட்ச வெப்பநிலை திருத்தணி : 38.6° செல்சியஸ் . குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்):- கரூர் பரமத்தி : 20.5° செல்சியஸ் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் குறைந்துள்ளது. ஏனைய தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2° செல்சியஸ் அதிகமாகவும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் குறைவாகவும் இருந்தது. ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.
வடதமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35-39° செல்சியஸ், தென்தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 32-39° செல்சியஸ், தமிழக கடலோரப்பகுதிகள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34-37° செல்சியஸ், மலைப் பகுதிகளில் 19-26° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை
• மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
• தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
14-04-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
15-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
16-04-2025 முதல் 20-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு: 14-04-2025 மற்றும் 15-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
16-04-2025 முதல் 18-04-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிபடியாக உயரக்கூடும் .
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு: 14-04-2025 மற்றும் 15-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
16-04-2025 முதல் 18-04-2025 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை
இன்று (14-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (15-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் & அரபிக்கடல் பகுதிகள்: 14-04-2025 முதல் 18-04-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications