தமிழகத்தில் கத்தரி வெயிலில் நடந்த ஆச்சரியம்.. பின்னாடியே வந்த தென்மேற்கு பருவ மழை.. சூப்பர் மாற்றம்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, வேலூர், சேலம், திருப்பத்தூர், தர்மபுரி, செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் குறைந்து குளுகுளு காலநிலை நிலவுகிறது. இந்நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை அடுத்த 5 நாட்களில் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பொதுவாக கத்திரி வெயில் காலத்தில் கடுமையான வெயில் இருக்கும். சென்னையில் எல்லாம் ஏசி இல்லாமல் தூங்கவே முடியாது. பல ஊர்களில் மின் விசிறிகள் தான் மக்களை காப்பாற்றும். பலருக்கும் இந்த கத்திரி வெயில் காலத்தில் சரும நோய்களும் வரும். வெயில் உக்கிரமாக இருக்கும் என்பதால் மக்கள் அவதிப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை அப்படி இல்லை. மழைப் பொழிவுடன் தான் கத்திரி வெயில் தொடங்கியது.

என்ன தான் சுட்டெரித்தாலும், மழை ஆங்காங்கே பெய்ய தொடங்கியது. கடந்த 16-ந்தேதி முதல் லேசான மழைப் பொழிவு தமிழ்நாடு முழுவதும் காணப்பட்டது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வெப்பத்தை தணித்தது. சில மாவட்டங்களில் அவ்வப்போது கனமழையும் பெய்தது.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 12 சென்டிமீட்டரும், அரக்கோணம், சேலம் மாவட்டம் டேனிஷ்பேட்டை, தர்மபுரி, தேன்கனிக்கோட்டையில் தலா 6 செ.மீட்டரும் மழை பெய்திருக்கிறது.
இந்நிலையில், தென்மேற்கு பருவமழை 27-ந்தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே அடுத்த 5 நாட்களில் அதாவது 25-ந்தேதிக்குள் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் அறிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "கேரளாவில் தென்மேற்கு பருவமழை அடுத்த 4 அல்லது 5 நாட்களில் தொடங்க வாய்ப்புள்ளது. இது தமிழகத்தின் சில பகுதிகளில் பரவும். இதேபோல, மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா, வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
மேலும், கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடலில் இன்று (புதன்கிழமை) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இது நாளை காற்றத்தழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும். பின்னர் இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக் கூடும். இதனால், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும்" இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications