வெள்ளத்தில் மூழ்கிய 4 மாவட்டங்களுக்கு அலர்ட்.. அடுத்த 3 மணி நேரம் மழை கொட்டும் - வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரம் 4 தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், "மாலை 4 மணிக்குள் 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அடுத்த 3 மணி நேரம் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு பெய்ய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக சில பகுதிகளில் மழை நீர் தேங்கலாம். சில இடங்களில் சாலைகள் வழுக்கும் நிலையில் இருக்கும் என்பதால் கவனம் தேவை. சில பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படும் சூழல் உள்ளன. பழைய கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயம் உள்ளதால் அருகில் செல்ல வேண்டாம்."

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பிப்ரவரி 1 ஆம் தேதியான இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.
பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக் கூடும். உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. பிப்ரவரி 3 ஆம் தேதி தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும். பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் பிப்ரவரி 7 ஆம் தேதி வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்ப நிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டி மீட்டரில்): தூத்துக்குடி (தூத்துக்குடி) 5, ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்) 4, சிவகாசி (விருதுநகர்), ஆயிக்குடி (தென்காசி), கருப்பாநதி அணை (தென்காசி) தலா 3, பாளையம்கோட்டை (திருநெல்வேலி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) தலா 2, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), வத்திராயிருப்பு (விருதுநகர்), புத்தன் அணை (கன்னியாகுமரி), தேக்கடி (தேனி), ராஜபாளையம் (விருதுநகர்), சிற்றாறு I (கன்னியாகுமரி) தலா 1." என்று குறிப்பிட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications