நெருங்கிவிட்டது வடகிழக்கு பருவமழை! எப்போது தொடங்கும்.. சூப்பர் அப்டேட் கொடுத்த வானிலை மையம்
சென்னை: தமிழகத்திற்கு அதிக மழை பொழிவை தரும் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்பது குறித்து வானிலை மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் 2ஆவது வாரத்தில் நிறைவு பெறும். அந்த வகையில் நடப்பாண்டு தென் மேற்கு பருவமழை விலகுவதற்கான சூழல் நிலவுகிறது.

இது விலகினால்தான் வடகிழக்கு பருவமழை தொடங்கும். இந்த வடகிழக்கு பருவமழை தமிழகத்திற்கு மழை பொழிவை கொடுக்கும் என்பதால் இந்த மழையை டெல்டா விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
கடந்த ஆகஸ்ட், செப்டம்பரில் மழை பெய்தாலும் நீர் நிலைகள் நிரம்பவில்லை. கர்நாடகாவும் தண்ணீர் தர மறுத்து வரும் நிலையில் இந்த வடகிழக்கு பருவமழை பெய்தால் மட்டுமே சாகுபடி செய்ய முடியும் என்ற நிலை இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது: வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 22 ஆம் தேதி முதல் அக்டோபர் 25 ஆம் தேதிக்குள் தொடங்கும்.
தமிழகத்திற்கு அதிக மழை பொழிவை தரும் வடகிழக்கு பருவமழை தொடங்கும் சாதகமான சூழல் நிலவுகிறது. தமிழகத்தில் சராசரியாக அக்டோபரில் 177.2 மி. மீ. மழையும் நவம்பரில் 178.8 மி.மீ , டிசம்பரில் 92 மி.மீ. மழை பெய்வது இயல்பானதாகும். தமிழகத்தில் மொத்தமாக 448 மி.மீ. மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்னும் ஓரிரு நாட்களில் தெலுங்கானா, மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் 19 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இன்று அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருந்தது. இதுவும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையிலும் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இன்றும் காலை லேசான தூறல் ஏற்பட்டது. பின்னர் வெயில் கொளுத்த தொடங்கியது.












Click it and Unblock the Notifications