சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை! இன்றும் நாளையும் இதே நிலைதான்.. வானிலை மையம் வார்னிங்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், நேற்று திடீரென பெய்த மழை மொத்த வானிலையையும் மாற்றியுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
ஜூலை முதல் வாரம் வரை தமிழகத்தில் வெயில் வாட்டி எடுத்த நிலையில், இறுதியில் பருவமழை தீவிரமடைய தொடங்கியது. எனவே வெயிலின் தாக்கம் குறைந்தது. தென்மேற்கு பருவமழை மத்திய இந்தியா வரை உள்ள நிலப்பரப்புக்கு ஆண்டின் மொத்த மழைப்பொழிவில் 70%ஐ கொடுக்கும். எனவே இதனை நம்பி கோடிக்கணக்கான விவசாயிகள் இருக்கின்றனர்.

தமிழ்நாட்டை பொறுத்த வரை கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கி நேற்று வரை 22% கூடுதலாக மழை பொழிவை தென்மேற்கு பருவமழை கொடுத்திருக்கிறது. இந்த காலங்களில் ஒட்டுமொத்தமாக சராசரியாக 300.1 மி.மீ மழை பொழிந்திருக்க வேண்டும். ஆனால் 367.5 மி.மீ மழை பெய்திருக்கிறது. அதிகபட்சமாக நீலகிரியில் 1223.8 மி.மீ, கோவையில் 947.5 மி.மீ என மழை பெய்திருக்கிறது. குறைந்தபட்சமாக தூத்துக்குடியில் 50.4 மி.மீ, நாகப்பட்டினத்தில் 122.3 மி.மீ என மழை பதிவாகியுள்ளது.
நாகையில் பெய்த மழை இயல்பை விட -46 சதவிகிதம் குறைவாகும். நாகை, திருவாரூர், மயிலாடுதுறை என ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் மழை குறைவாக பெய்திருக்கிறது.
இந்நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை விடைபெற தொடங்கியுள்ளது. எனவே வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்துள்ளது. வழக்கமாக இந்த மாதங்களில் மேகங்கள் அதிக அளவுக்கு தமிழ்நாட்டின் நிலப்பரப்பின் மேல் குவிய தொடங்கும். இந்த முறை மேக அடர்த்தி குறைந்துள்ளது. எனவே, வெயில் அதிகமாக இருக்கிறது.
இருப்பினும் வட மாவட்டங்களில், குறிப்பாக சென்னையில் கடந்த 2 நாட்களாக இரவில் மழை பெய்து வருகிறது. நேற்று சென்னை மணலியில் சுமார் 150 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. தவிர மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், நந்தனம், அயனாவரம், மயிலாப்பூா், பெரம்பூா், புரசைவாக்கம், தண்டையாா்பேட்டை, மாதவரம், ஆலந்துா், கிண்டி, எழும்பூா், மாம்பலம், அம்பத்தூா், பட்டரவாக்கம், கொரட்டூா், கோயம்பேடு, அண்ணா நகா், தியாகராய நகா், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், புகா் பகுதிகளான தாம்பரம், வண்டலூா் ஆகிய இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், “மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்ககடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா- தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், தரைக்காற்று ஓரிரு இடங்களில் மணிக்கு 30 -40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்த அளவில் இன்று, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications