பெரிய “மிஸ்டேக்”.. மீண்டும் சொதப்பிய வானிலை மையம்! ரெட் அலர்ட் அளவு மழைக்கு ஆரஞ்ச் அலர்ட் கூட இல்ல
சென்னை: நெல்லையின் மலைப் பகுதிகளில் நேற்று ரெட் அலர்ட் அளவில் அதி கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் இதுதொடர்பாக எந்த விதமான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கவில்லை.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் கடந்த 2, 3 நாட்களாக மீண்டும் மிக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிபட்சமாக நெல்லை மாவட்டம் ஊத்து மலைப் பகுதியில் 220 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. நெல்லை நாலுமுக்கு பகுதியில் 210 மில்லி மீட்டர் மழை கொட்டித் தீர்த்து இருக்கிறது. காக்காச்சி மலைப் பகுதியில் 200 மில்லி மீட்டர் மழையும், மாஞ்சோலையில் 102 மில்லி மீட்டர் மழையில் கொட்டித் உள்ளது.

அதேபோன்று நேற்று முந்தினம் நெல்லை மாவட்டம் காக்காச்சி மற்றும் ஊத்து பகுதியில் தலா 160 மில்லி மீட்டர் மழையும், நாலுமுக்கு பகுதியில் 150 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி இருக்கிறது. வானிலை ஆய்வு மையம் மழையின் அளவை பொறுத்து ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட், மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையை விடுத்து வருவது வழக்கம். 64.5 மிமீ முதல் 115.5 மிமீ வரை மழை பொழியும் என்றால் மஞ்சள் அலர்டும், 115.6 முதல் 204.4 மிமீ வரை மழை பெய்ய வாய்ப்பு இருந்தால் ஆரஞ்சு அலர்டும், 204.4 மிமீக்கும் அதிகமாக மழை பெய்யும் என்றால் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்படுகிறது.
தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் தனது தினசரி வானிலை அறிக்கையில் மழையின் தீவிரத்தை பொறுத்து "கனமழை" என்றும், "மிக கனமழை" என்றும் குறிப்பிடுவது வழக்கம். ஆனால், தற்போது நெல்லையின் மலைப் பகுதிகளில் கொட்டித்தீர்த்த மழைக்கு முன்னதாக கனமழை எச்சரிக்கைகூட விடுக்கவில்லை. வியாழன் அன்று வெளியான அறிக்கையில், டிசம்பர் 28, டிசம்பர் 29, டிசம்பர் 30 ஆகிய நாட்கலில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்." என்றுதான் குறிப்பிடப்பட்டு இருந்தது. டிசம்பர் 31 ஆம் தேதிதான் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது." என குறிப்பிட்டு இருந்தது.
நேற்று மதியம் வெளியிட்ட அறிக்கையில், "29.12.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது." என்று குறிப்பிட்டு இருந்தது. மிக கனமழை என்று கூட அதில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், ரெட் அலர்டுக்கு இணையான அதி கனமழை கொட்டித் தீர்த்து இருப்பதாக தற்போது அதே வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சமீபத்தில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த பெரு மழையின் காரணமாக பெரு வெள்ளம் ஏற்பட்டது. அப்போது வானிலை ஆய்வு மைய கணிப்பின் துல்லியத்தன்மை தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ், பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர். ஆனால், அதி நவீன தொழில்நுட்பங்கள் இருப்பதாகவும், தங்கள் மீது தேவையற்ற விமர்சனங்களை முன்வைக்க வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டது. அடுத்த சில நாட்களிலேயே துல்லியமாக மழையை கணிக்க தவறி இருக்கிறது வானிலை ஆய்வு மையம்.












Click it and Unblock the Notifications