இரவு முழுக்க டமால் டுமீல்.. கனமழையால் சென்னைவாசிகள் குஷி.. 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழை
சென்னை: இடி மின்னலுடன் சென்னையிலும் புறநகரிலும் விடிய விடிய கனமழை பெய்தது. இரவு முழுவமும் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலையின் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. பல பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் குறுகிய சாலைகளில் வாகனங்கள் மெதுவாகவே ஊர்ந்து சென்றன.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை மெல்ல விடைபெற உள்ளது. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் செப்டம்பர் 30 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் செப்டம்பர் 30 வரை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இரவு முதல் பரவலாக கனமழை பெய்தது. சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது.
சென்னையில் நகர் பகுதிகளில் மட்டுமல்லாது புறநகர் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. கோயம்பேடு, ராமாபுரம், மதுரவாயல், வளசரவாக்கம், வானகரம், ஆலப்பாக்கம், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி,மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.
திருவான்மியூர், நீலாங்கரை, அண்ணா நகர், திருமங்கலம், தி.நகர் ஓ.எம்.ஆர் மற்றும் ஈ.சி.ஆர் பகுதிகளிலும் கனமழை கொட்டியது. முக்கிய சாலைகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி, வெள்ளக்காடாக காட்சியளித்தது. ஞாயிறு இரவு மழையோடு முடிந்தது. திடீர் மழையால் வெளியூர் சென்று திரும்பிய வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை உட்பட 12 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications