சென்னை உட்பட.. 21 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக வட மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் சென்னை உட்பட 21 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதாவது, திருவள்ளூர், காஞ்சிபுரம், கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு காலை 10 மணி வரை கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம்,
தஞ்சாவூர், திருவாரூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு லேசான மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக நேற்று விடுக்கப்பட்டிருந்த வானிலை அறிவிப்பில், "சௌராஷ்ட்ரா கடலோரப்பகுதிகள் மாற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அக்.1ம் தேதி காலை வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு நகர்ந்து, அன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அக்.2ம் தேதி அன்று நள்ளிரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்.3ம் தேதி காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவி, காலை 11.30 மணி அளவில் "சக்தி" புயலாக வலுப்பெற்று, துவாரகாவிலிருந்து (குஜராத்) மேற்கு-தென்மேற்கே சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது.
இது (சக்தி புயல்), அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் சற்று நகர்ந்து, பிறகு, மேற்கு-தென்மேற்கே நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெறக்கூடும். இது 05-ஆம் தேதி வரை மேற்கு-தென்மேற்கே மேலும் நகர்ந்து, வடக்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய அரபிக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.
எனவே இன்று (அக்.4ம் தேதி) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்.5ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்.6 முதல் 9 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
இன்று தொடங்கி அக்.7 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஒருசில இடங்களில் சற்று குறையக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
இன்று முதல் அக்.7 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (04-10-2025): வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், அவ்வப்போவது கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-34° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications