ஒர்க் ஃப்ரம் ஹோம் கொடுங்க.. அறிவுறுத்திய தமிழக அரசு! மறுக்கும் ஐடி நிறுவனங்கள்? புலம்பும் ஊழியர்கள்
சென்னை: தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை தொடரும் நிலையில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை ’ஒர்க் ஃப்ரம் ஹோம்’ மூலம் பணியாற்ற அனுமதிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருக்கும் பல ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை நேரடியாக பணிக்கு வர வேண்டும் என வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உள்ளிட்டவை காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, தென்காசி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

15ஆம் தேதியான நாளை முதல் 17ஆம் தேதி வரை சென்னை மற்றும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நாளை கனமழையும் நாளை மறுநாள் அதிக கனமழையும் பெய்யும் என எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டின் கடலோர மற்றும் வட மாவட்டங்களில் 14.10.2024 முதல் 17.10.2024 வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் , 14.10.2024 முதல் 17.10.2024 வரை மொத்தம் சுமார் 40 செ.மீ. வரையும், ஒரே நாளில் அதிகபட்சமாக 20 செ.மீ. மழை பெய்யக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு முன்னெச்சரிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழ்நாட்டில் கனமழையை எதிர் கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கனமழையை எதிர்கொள்ளவும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
இதை அடுத்து கனமழை தாக்கத்தை எதிர்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் சில அறிவுரைகளையும் வழங்கி உள்ளார். அதன்படி, ”அக்டோபர் 15ஆம் தேதியான நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். அக்டோபர் 15 முதல் அக்டோபர் 18 வரை தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும். ரொட்டி, குடிநீர் பாட்டில்கள் நிவாரண மையங்களில் இன்றே இருப்பு வைக்க வேண்டும். மேலும், மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். மழை வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்படும் போது, பொதுமக்களுக்கு உடனடியாக மாற்று வழித்தடம் ஏற்பாடு செய்ய வேண்டும்” உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
வழக்கமாக சென்னையில் கனமழையின் போது மின்சார ரயில்கள், பொதுப் போக்குவரத்து, ஆட்டோக்கள் உள்ளிட்டவை இயங்காது. மேலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் இருசக்கர வாகனங்களை இயக்குவதிலும் சிரமம் இருக்கும். இதன் காரணமாகவே ’ஒர்க் ஃப்ரம் ஹோம்’ வாய்ப்பு இருக்கும் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதிக்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் ஐடி நிறுவனங்கள் அதிகம் இருக்கும் பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே மின்சார ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயிலில் பயணிப்பது சிரமமாக இருக்கிறது. மேலும் அந்த சாலைகளில் எப்போதும் வாகன நெரிசல் இருக்கும் நிலையில் மழை காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதன் காரணமாகவே தமிழக அரசு ஐடி ஊழியர்களுக்காக ’ஒர்க் ஃப்ரம் ஹோம்’ அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் பல நிறுவனங்கள் அதனை ஏற்கவில்லை என புகார் கூறுகின்றனர். மேலும் ஊழியர்கள் தங்கள் ஷிப்டுக்கு முன்னதாகவே வர வேண்டுமென கூறுகிறார்களாம். இதன் காரணமாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் உரிய கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications