சென்னையில் கிறிஸ்துமஸுக்கு மழை இருக்குமா? யு டர்ன் அடித்த புயல் சின்னம்! வானிலை மையம் விளக்கம்
சென்னை: வங்கக்கடலில் உருவாகியிருந்த புயல் சின்னம், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. இது தற்போது தமிழக கடல் பகுதியை நோக்கி யு டர்ன் அடித்திருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. எனவே கிறிஸ்துமஸ் நாளன்று சென்னையில் மழை இருக்குமா? என்பது குறித்து சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
அதாவது, "நேற்று மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்று (23-12-2024) காலை 8.30 மணி அளவில், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தெற்கு ஆந்திர - வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது.

இது மேலும், மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து, நாளை (24-12-2024), தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகில் நிலவக்கூடும்.
எனவே இன்று (டிச.23) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
நாளை (டிச.24) வடகடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
டிச. 25ம் தேதி தொடங்கிய டிச.29ம் தேதி வரை வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று தொடங்கி டிச.25 வரை வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
டிச.26 மற்றும் 27ம் தேதிகளில் எச்சரிக்கை ஏதுமில்லை.
வங்கக்கடல் பகுதிகள்:
இன்று (டிச.23) ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
டிச.24 மற்றும் 25ம் தேதிகளில் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
டிச.26 மற்றும் 27ம் தேதிகளில் எச்சரிக்கை ஏதுமில்லை.
அரபிக்கடல் பகுதிகள்:
எச்சரிக்கை ஏதுமில்லை. மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications