கொஞ்சமும் இரக்கமே இல்லையா உனக்கு'.. மீண்டும் தென்சென்னையில் வெளுக்க தொடங்கிய மழை
சென்னை: சென்னையில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. வேளச்சேரி, மடிப்பாக்கம், கீழ்கட்டளை, ஆதம்பாக்கம், பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், தரமணி, பெருங்குடி உள்பட தென்சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 16 செமீ மழை பதிவாகி உள்ளது. மீனம்பாக்கம் என்று எடுத்துக்கொண்டால், தென்சென்னை பகுதிகள் மற்றும் தாம்பரம் பகுதிகளை உள்ளடக்கியதாகும். இங்கு இன்று அதிகாலை இடி மின்னலுடன் மிக கனமழை பெய்தது.

இப்படி ஒரு மழை, கடந்த 1996ம் ஆண்டு பெய்தது. அப்போதே ஒரே நாளில் 28 செமீ மழை பெய்தது. அதற்கு பிறகு தற்போது தான் முதல்முறையாக ஒரே நாளில் 16 செமீ மழை பெய்துள்ளது. சென்னை முழுவதுமே நல்ல மழை பெய்துள்ளது.
இந்நிலையில் தென் மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய மிதமான / கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்" என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இந்நிலையில் சென்னையில் பிற்பகல் 3.45 மணிக்கு மேல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. வேளச்சேரி, மடிப்பாக்கம், கீழ்கட்டளை, ஆதம்பாக்கம், பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், தரமணி, பெருங்குடி உள்பட தென்சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே மழைக்காலங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கவனமாக செல்ல வேண்டும். புதிய சாலைகளில் செல்வதை இப்போதைக்கு தவிர்ப்பது நல்லது. பழக்கம் இல்லாத சாலைகளில் பள்ளம் இருந்தால் உங்களுக்கு தெரியாமல் போக அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சென்னை மக்களே கவனமாக செல்லுங்கள்.












Click it and Unblock the Notifications