நேற்றை போல் இன்றும் வெளுக்கும்! சென்னைக்கு 50:50 சான்ஸ்! ஹாட் ஸ்பாட் எந்தெந்த இடங்கள் தெரியுமா?
சென்னை: சென்னை முதல் தூத்துக்குடி வரை கடலோர பகுதிகளில் மழை தொடரும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக வடதமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மிக கனமழை கொட்டியது. இதனால் முதல்வரின் தொகுதியான கொளத்தூரில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அது போல் திநகர் பகுதிகளிலும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துவிட்டது.
இதனால் கட்டில்கள் மேல் உட்கார்ந்தபடியே மக்கள் தூக்கமின்றி தவித்தனர். இன்று காலையும் சென்னையின் மயிலாப்பூர், பட்டினம்பாக்கம், மந்தைவெளி, லஸ் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீரை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன.
நேற்றைய தினம் சுரங்கபாதைகளில் தண்ணீர் தேங்கியதால் அங்கு இரு சக்கர வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அது போல் இரவு நேரத்தில் மீட்பு பணிகளில் அமைச்சர் சேகர்பாபு, ஐஏஎஸ் ராதாகிருஷ்ணன், மேயர் பிரியா ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் இந்த வாரம் முழுவதும் மழை கொட்டும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நேற்று சென்னையில் பெய்தது 3 மணி நேர தீவிர மழை, இதற்கே தலைநகரம் ஸ்தம்பித்துவிட்டது. அப்படிப்பட்ட சூழலில் இன்றும் தீவிர மழை பெய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து சென்னை ரெயின்ஸ் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சென்னை முதல் தூத்துக்குடி வரை கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும்.

கனமழைக்கான ஹாட்ஸ்பாட் புதுச்சேரியும் டெல்டா மாவட்டங்களும்தான். நேற்று கொட்டோ கொட்டுனு கொட்டியது போல் இன்றும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நேற்று கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்தித்துக் கொண்டதால் இத்தகைய மழை பெய்தது. இவ்வாறு சென்னை ரெயின்ஸ் தெரிவித்துள்ளது.
அது போல் இன்னொரு ட்வீட்டில் வெளியே போவோர் குடை, ரெயின் கோட் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை கொண்டு செல்லுங்கள். கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications