நெருங்கும் புயல்.. சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்! தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு
சென்னை: வங்கக்கடலில் உருவான புயல் சென்னைக்கு நெருக்கமாக வந்திருக்கும் நிலையில், புறநகர் ரயில் சேவை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நிலைமை சீரான பின்னர் மீண்டும் ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் வங்கக்கடலில் ஏற்பட்டிருந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சியானது தற்போது புயலாக வலுப்பெற்றிருக்கிறது. இப்புயல் புதுச்சேரியை ஒட்டிய பகுதியில் கரையை கடக்கும் என்று கணக்கிடப்பட்டிருந்த நிலையில், இது சென்னையை ஒட்டிய மாமல்லபுரம் பகுதியில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புயல் காரணமாக சென்னையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. நேற்றிரவு தொடங்கி இன்று மதியம் வரை மழை குறையவில்லை.

மழை காரணமாக சில இடங்களில் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. அதேநேரம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல விமான சேவையும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதையில் மழைநீர் வெள்ளமாக தேங்கியிருப்பதால் ரயில் நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, பல மெட்ரோ நிலையங்களிலும் மழைநீர் தேங்கியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கும்மிடிப்பூண்டியில் அதிகமழை பதிவாகியுள்ளது.
எனவே விமான சேவையை தொடர்ந்து ரயில் சேவையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக புறநகர் ரயில்கள் சில ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. சென்னை கடற்கரை முதல் தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கபடும் ரயில்களில் சிலவும், சென்னை சென்ட்ரலிலிருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்களில் சிலவும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே மழை குறித்த அறிவிப்பு வழங்கப்பட்டிருந்ததால் பயணிகள் தங்கள் பயண திட்டங்களை தள்ளி வைத்திருக்கின்றன. ஆயினும் திட்டமிடாமல் பயணம் மேற்கொள்ள முயன்றவர்கள் இந்த ரயில் ரத்து அறிவிப்பால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
மறுபுறம் சென்னை மாநகர பேருந்துகள் வழக்கம் போல இயங்கி வருகின்றன. இரவில் காற்றும், மழையும் அதிகமாக இருக்கும் என்பால் மீட்பு படையினர் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
மழையை பொறுத்தவரை அடுத்த 2 மணி நேரத்திற்கு அதாவது மதியம் 1 மணி வரை, சென்னை உட்பட 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டைக்கு மஞ்சள் அலர்ட்டும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர், நாமக்கல், திண்டுக்கல், மதுரை , சிவகங்கைக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications