சென்னை உட்பட.. வட மாவட்டங்களுக்கு இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் வார்னிங்
சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியிருக்கிறது. குறிப்பாக வட மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் இன்றும் சென்னை உட்பட வட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
குறிப்பாக இன்று காலை 7 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் விழுப்புரம் என 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செப்.22 முதல் 25 வரை: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (20-09-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஜூன் 1ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று வரை தமிழ்நாடு முழுவதும் சராசரியாக 295.4 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியிருக்கிறது. இது இந்த காலத்தில் பெய்ய வேண்டிய இயல்பான மழையை விட 5% அதிகமாகும். அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 255.9 மி.மீ என மழை பதிவாகியிருக்கிறது. இந்த மாவட்டத்தில் இது இயல்பை விட 254% அதிகமாகும். சென்னையில் 35%, கோயம்புத்தூரில் 41%, மயிலாடுதுறையில் 67%, ராணிப்பேட்டையில் 52%, தென்காசியில் 62%, திருப்பத்தூரில் 31%, திருவள்ளூரில் 38%, திருவாரூரில் 19% மற்றும் வேலூரில் 48% அளவுக்கு மழை இயல்பை விட அதிகமாக பெய்திருக்கிறது.
மறுபுறம் விருதுநகரில் 37%, திருச்சியில 23%, தூத்துக்குடியில் 51%, திருப்பூரில் 53%, நாமக்கல்லில் 27%, நாகப்பட்டினத்தில் 20%, கரூரில் 29%, கன்னியாகுமரியில் 24%, காஞ்சிபுரத்தில் 26%, ஈரோட்டில் 24%, திண்டுக்கல்லில் 31% என மழை இயல்பை விட குறைவான அளவு பெய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications