அடுத்த 36 மணி நேரம்.. சென்னைக்கு அருகிலேயேதான் இருக்கும்.. டிட்வா புயல்.. வெதர்மேன் முக்கிய வார்னிங்
சென்னை: வங்கக்கடலில் உருவாகி இருக்கும் தாழ்வு மையம் கண்டிப்பாக அடுத்த 36 மணி நேரத்திற்கு சென்னைக்கு அருகிலேயே இருக்க போகிறது, என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
டிட்வா புயல் வலிமை இழந்து ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. ஆனால் இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நகராமல் தமிழகக் கடலோரத்தில் அசையாமல் நிற்கிறது. முக்கியமாக வங்கக்கடலில் சென்னைக்கு அருகே நிற்பதால் இந்த தாழ்வு மண்டலம் கடுமையான மழையை கொடுக்கிறது.
சென்னை மற்றும் அதன் கரையோரப் பகுதிகளில் கனமழை விடாமல் பெய்து வருகிறது. இந்த தாழ்வு மண்டல அமைப்பின் மெதுவான நகர்வால், வலுவான மழை மேகங்கள் மீண்டும் மீண்டும் நகரை நோக்கி வருகிறது, இதுவே அதிகாலை முதல் தொடர் மழையைக் கொண்டுவந்ததாக வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதாவது தாழ்வு மண்டலம் அருகிலேயே இருந்தபடி .. மழை மேகங்களை சென்னையை நோக்கி நகர்த்தி வருகிறது.

வங்கக்கடலில் உருவாகி இருக்கும் தாழ்வு மையம்
இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், புயல் மேகத்தின் ஒரே ஒரு பகுதி சரியாக சென்னைக்கு மேலே வந்து கிளிக் ஆகி உள்ளது. இதன் காரணமாகவே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கனமழை பெய்துள்ளது. முன்பு இதற்கான சூழல் இல்லாமல் இருந்தது. இன்று எல்லாம் கூடி வந்துவிட்டது.
அதனால்தான் நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்தது. அதேபோல் இன்று ஆரஞ்ச் அலர்ட் கொடுத்தது. வளிமண்டல சுழற்சி இருக்கும் வரை மேகங்கள் வந்துகொண்டேதான் இருக்கும். அதேபோல் இது சென்னைக்கு, அருகே வரும் வரை, நமக்கு தெற்கு பக்கமாக வரும் வரை மேகங்கள் கண்டிப்பாக மேகங்கள் வந்துகொண்டே இருக்கும்.
இந்த தாழ்வு மையம் கண்டிப்பாக அடுத்த 36 மணி நேரத்திற்கு சென்னைக்கு அருகிலேயே இருக்க போகிறது, என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மழை விவரம்
நேற்று இரவு சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி, திருவொற்றியூர், எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு மழை பெய்தது. அதிகாலையில் 1-2 மணி நேரம் விடாமல் மழை பெய்தது. ஆனாலும் அங்கு தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது.
இப்போது காலை 9 மணியில் இருந்து மீண்டும் விடாமல் மழை பெய்து வருகிறது. இன்று தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை மாவட்டங்களில் சில இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
நாளையும் சென்னையில் மழை தொடரும். அதேபோல் நாளை தமிழ்நாடு. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நிவகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications