குளிர் நடுங்குதே.. இன்னும் எத்தனை நாள் குளிர் இருக்கும்? எங்கே அதிகமாக இருக்கும்! வானிலை மையம் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே நல்ல குளிர் நிலவி வருகிறது. மழை என்பது ஓரிரு இடங்களில் மட்டுமே பெய்யும் நிலையில், மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் குளிர் உணரப்படுகிறது. இதற்கிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது தொடர்பாக வானிலை மையம் சில முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த பருவமழை சீசனில் பரவலாக நல்ல மழை பெய்தது. இதனால் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பிவிட்டன. மழை சீசன் முடிந்த பிறகு, குளிர் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

இதன் காரணமாகக் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நல்ல குளிர் நிலவி வந்தது. இதற்கிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை மையம் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளது
வானிலை மையம்:
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தெற்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (ஜனவரி 24) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
நாளை (ஜனவரி 25) முதல் முதல் ஜனவரி 27ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் ஜனவரி 28, 29 தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை புறநகர்:
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (ஜனவரி 24) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23' செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது. மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.
வெதர்மேன்:
முன்னதாக மாநிலத்தில் நிலவும் வெப்பம் தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டரில், "ஜனவரி 23ம் தேதி குறைந்தபட்ச வெப்பநிலை கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால், அடுத்த 5-6 நாட்களில் தென்னிந்தியாவில் குறைந்தபட்ச வெப்பநிலை தொடர்ந்து குறையும். தென் தமிழகம் மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் மழை பெய்து வருவதால், குறைந்தபட்ச வெப்பநிலை உயர்ந்துள்ளது. அதேநேரம் தென்னிந்தியாவின் மிகவும் குளிரான இடமாக அரக்கு தொடர்ந்து இருந்து வருகிறது. மேக மூட்டம் காரணமாக மூணாறு மற்றும் வால்பாறையில் வெப்பம் அதிகமாக இருந்தது.
எங்கே குளிர் அதிகம்:
தென்னிந்தியாவின் ஆந்திரா அரக்கு பகுதியில் குறைந்தபட்சமாக 6.6 டிகிரி வெப்பம் நிலவுகிறது. (கொடைக்கானல்)- 9.5 டிகிரி, (சிக்கமகளூரு) - 10.2 டிகிரி, ஏற்காடு (தமிழ்நாடு) - 11.0 டிகிரி, ஊட்டி (தமிழ்நாடு) - 11.6 டிகிரி, குன்னூர் (தமிழ்நாடு) - 11.6 டிகிரி, மூணாறு (கேரளா) 13.8 டிகிரி, ஏலகிரி (தமிழ்நாடு) - 14.5 டிகிரி வெப்பம் நிலவுகிறது" என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள நகரங்களைப் பொறுத்தவரைத் திருத்தணி - 19.5 டிகிரி, சேலம் - 19.7 டிகிரி, திருப்பத்தூர் - 19.7 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications