பாம்பனில் வெடித்து சிதறிய மேகம்.. ராமேஸ்வரத்தில் 10 மணிநேரத்தில் 41 செமீ மழை.. கரைபுரளும் வெள்ளம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த வேளையில் பாம்பனில் திடீர் மேகவெடிப்பு நிகழ்ந்ததால் அங்கு 3 மணிநேரத்தில் 19 சென்டிமீட்டர் மழை பெய்ததோடு, ராமேஸ்வரத்தில் இன்று காலை முதல் 10 மணி நேரத்தில் மொத்தம் 41 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் அந்த பகுதிகளில் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக நேற்று நள்ளிரவு முதல் தென்தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை என்பது விடாமல் பெய்தபடியே இருந்தது.

அதாவது தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்பட பல தென்தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்தது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை என்பது பெரிதும் பாதிக்கப்பட்டது.
ஏனென்றால் பிற தென்தமிழக மாவட்டங்களை ஒப்பிடும்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் தான் கனமழை என்பது வெளுத்து வாங்கியது. குறிப்பாக பாம்பனில் மேகவெடிப்பு ஏற்பட்டு வெறும் 3 மணிநேரத்தில் மொத்தம் 19 சென்டிமீட்டர் மழை என்பது பதிவாகி உள்ளது. இதனை சென்னை வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‛‛ ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை 19 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மிகக் குறுகிய இடத்தில் உருவான வலுவான மேகக்கூட்டங்கள் காரணமாக மேகவெடிப்பு நிகழ்ந்துள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக இன்று ராமேஸ்வரத்தில் கனமழை பதிவாகி உள்ளது. காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரையிலான 10 மணி நேரத்தில் ராமேஸ்வரத்தில் மொத்தம் 41 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. குறிப்பாக ராமேஸ்வரத்தில் பிற்பகலில் கனமழை கொட்டித்தீர்த்தது. அதாவது மதியம் 1 மணி முதல் 4 மணி வரை மொத்தம் 4 மணிநேரத்தில் ராமேஸ்வரத்தில் மட்டும் 36 சென்டிமீட்டர் மழை என்பது பதிவாகி உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பனில் பல இடங்களில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடிவருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு இன்று தென்தமிழகத்தில் மிக கனமழை முதல் அதி கனமழைக்கான ‛ரெட் அலர்ட்' விடுவிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமநாதபுரத்தில் இன்று இரவும் மழை வெளுத்து வாங்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications