நைட்டில் இருந்து நான்-ஸ்டாப் மழை.. களமிறங்கிய முதல்வர் ஸ்டாலின்.. கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு
சென்னை: சென்னையில் விடாமல் அடைமழை பெய்து வருகிறது.. இதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.. இந்நிலையில் மழை நிவாரணப் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களை வீடியோ காலில் அழைத்து முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். மழை நிவாரணப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர், கடலூர், புதுச்சேரி, நாகை உள்பட பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது, வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்ற காலை அறிவித்தது.

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை. கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது போலவே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர், கடலூர், புதுச்சேரி, நாகை, புதுக்கோட்டை உள்பட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. திண்டுக்கல், தேனி, மதுரை என பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த மழை காரணமாக சிறப்பு தொலைப்பேசி எண்கள் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. ஆற்றின் கரையோரம் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.. மழை நிவாரண பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.. மரங்கள் விழுந்த இடங்கள், மின் கம்பங்கள் விழுந்த இடங்களில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் களத்தில் இறங்கி ஆய்வு பணிகளை செய்து வருகிறார், சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் கால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து, மழை நிவாரணப் பணிகள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மழை பாதிப்புள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ், மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி ஆகியோருடன் மழை பாதிப்புகளை கேட்டறிந்தார்.












Click it and Unblock the Notifications