ரூ.6000 சென்னை வெள்ள நிவாரணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்! அதுவும் வேளச்சேரியில்
சென்னை: மிக்ஜாம் புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரண தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழ்நாட்டில் 2023 டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தினங்களில் வீசிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் அதிகனமழை பெய்தது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் குறிப்பிட்ட சில வட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் மிக்ஜாம் புயல் வெள்ளம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.6000 ரொக்கமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, வெள்ள நிவாரணத் தொகை சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலமாக ரொக்கமாக வழங்கப்படும் என்றும், இதனை முறையாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் டோக்கன்களை முன்னதாகவே கூட்டுறவுத் துறை மூலம் வழங்கப்படலாம் எனவும், வருமான வரி செலுத்துபவர்கள் மற்றும் ஒன்றிய மற்றும் மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் உயர் அலுவலர்களைப் பொருத்த வரையில், அவர்கள் தங்களின் பாதிப்பு விபரங்களையும், வங்கி கணக்கு விபரம் ஆகியவற்றை தெரிவித்து நிவாரணத் தொகையினை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படலாம் எனவும் விரிவான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன.
மிக்ஜாம் புயலால் பாதிப்புக்குள்ளான நான்கு மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் பரிந்துரையின்படி இந்த நிவாரணம் பின்வருமாறு வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சென்னை மாவட்டம்: அனைத்து வட்டங்கள்.
செங்கல்பட்டு மாவட்டம்: தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாகவும், மற்றும் திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம்: குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள்.
திருவள்ளூர் மாவட்டம்: பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய ஆறு வட்டங்கள்.
இந்த புயல் மற்றும் அதி கனமழை காரணமாக சில பகுதிகளில் ATM மையங்கள் இயங்காததாலும், பயனாளர்களின் வங்கிக் கணக்கு எண்களை சேகரித்து நிவாரணம் வழங்க காலதாமதம் ஆகும் என்பதாலும், மேலும் பாதிக்கப்பட்ட பலர் தங்களது ATM அட்டை, வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றை இழந்திருக்கக்கூடும் என்பதாலும், அவர்களுக்கு உடனடியாக பயனளிக்கும் வகையில் நிவாரணத்தொகை ரொக்கமாக வழங்கலாம் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட/ இரண்டு நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து துணிமணிகள்/ பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் இழந்த குடும்பங்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக டோக்கன் வழங்கும் முறையை பின்பற்றி ரூ.6000 வழங்கப்படும். இந்த மழை வெள்ளத்தால் மத்திய, மாநில அரசு / மற்ற பொதுத்துறை நிறுவன உயர் அலுவலர்கள் மற்றும் வருமான வரி செலுத்துவோர் மற்றும் சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள், தங்களது வாழ்வாதாரம் பாதிப்பு/ துணி, பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் இழப்பு ஏற்பட்டிருந்தால், பாதிப்பு விபரங்களை தங்களது வங்கி கணக்கு விவரத்துடன் தங்கள் பகுதிக்குரிய நியாயவிலைக் கடைகளில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்தது.
அந்த விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு அதனடிப்படையில் அவர்களுக்கும் உரிய நிவாரணம் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்த அரசு, இதற்கு தேவையான அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடைகளிலேயே தேவையான அளவு வைத்திட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் கேட்டுக்கொண்டது.
நிவாரணத்தொகை வழங்குவது தொடர்பாக, நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு தேவையான பயிற்சி வழங்கப்பட்டு டோக்கன்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார். சென்னை வெள்ளத்தால் பெரும் பாதிப்பை சந்தித்த வேளச்சேரி அஷ்டலட்சுமி நகரில் முதலமைச்சர் ஸ்டாலின் பயனாளர்களுக்கு ரூ.6000 ரொக்கப் பணத்தை வழங்க உள்ளார்.












Click it and Unblock the Notifications