பட்டாளத்துக்கு வரப்போகுது விடிவுகாலம்?.. முதல்வரின் அதிரடி உத்தரவு.. சேகர்பாபு சொன்ன குட்நியூஸ்!
சென்னை: சென்னை பட்டாளம் பகுதியில் குடியிருப்பைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் மின் மோட்டார்களைக் கொண்டு மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பட்டாளம் பகுதியில் வெள்ளம் தேங்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. சென்னையில் கடந்த இரு நாட்களாக பெய்த பலத்த மழை நேற்று இரவு முதலே படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வந்ததால் பல்வேறு சாலைகளில் மழை நீர் தேங்கியது.

பட்டாளம் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து கடல்போலக் காட்சியளித்தது. பல பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். அத்தியாவசியப் பொருள்களை வாங்க கூட செல்ல முடியாமல் முடங்கியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மழை மற்றும் புயலின்போது பட்டாளம் பகுதி மிகுந்த பாதிப்புக்குள்ளாகும். இதைத்தொடர்ந்து, முதல்வர் முக ஸ்டாலின் நேற்று வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிலையில், பட்டாளம் பகுதியில் மழை நீர் பாதிப்புகளை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தட்டான்குளம் என்று அழைக்கப்படும் பட்டாளம் பகுதியில் ஆதி ஆந்திரா தெலுங்கு பேசும் மக்களும், மற்ற சமூகத்தினரும் ஒன்றிணைந்து வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் காலம்காலமாக மழை பெய்யும்போது எல்லாம் நீர் தேங்குவது வழக்கம்.
இதனைக் கருத்தில் கொண்டுதான் கடந்த முறை தமிழக முதல்வர் ஆய்வுக்கு வந்தபோது இப்பகுதியில் புதிதாக பம்பிங் ஸ்டேஷனை ஏற்படுத்தி 350 திறன் கொண்ட மோட்டார் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் புரசைவாக்கத்தில் தானா தெருவில் ஆரம்பித்து, விருமாணிக்கம் தெரு, மூக்கு தெரு ஆகிய தெருக்களின் வழியாக வந்து இந்த பம்பிங் ஸ்டேஷன் மூலமாக காந்தி கெனாலுக்கு சென்று, கேப்டன் கார்டன் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
இப்பகுதி மிகவும் தாழ்வான பகுதியாக இருப்பதால் மழை நீர் தேங்கி சற்று மெதுவாகத்தான் செல்கிறது. முதல்வர் நேற்று ஆய்வு செய்தபோது இப்பகுதியில் இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, ஐஐடி தொழில் வல்லுநர்களோடு ஆலோசித்து உரிய ஆலோசனைகள் மேற்கொண்டு அடுத்த பருவ மழைக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். மழை பெய்து நின்றவுடன் இரண்டு, மூன்று மணி நேரங்களில் தண்ணீரை அகற்றும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
உணவு, அத்தியாவசிப் பொருள்களை வாங்குவதற்கு பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வரும் நிலையில், பொதுமக்களின் வீட்டிற்கே சென்று உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திமுக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பட்டாளம் பகுதியில் 3 உணவு சமையல் கூடத்தில் இருந்து உணவு விநியோகம் செய்யப்படுகிறது. சென்னையில் தேங்கிய மழை நீர் துரிதமாக அகற்றப்படுகிறது. பால், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. சென்னையில் கால்வாய்கள் சீராக உள்ளதால் மழை நீர் வேகமாக வெளியேறி வருகிறது. புளியந்தோப்பு நெடுஞ்சாலை, ஓட்டேரி ஸ்ரீவட்சன் சாலை பகுதிகளில் முழுவதுமாக தண்ணீர் வடிந்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications