மிக கடுமையான பாதிப்பு.. இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி தேவை.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
சென்னை: மிக்ஜாம் புயல் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக மிக்ஜாம் புயல் சென்னையில் தாண்டவம் ஆடி விட்டுச் சென்றது என்றே சொல்லலாம். ஞாயிறு இரவு தொடங்கிய கனமழை நேற்று காலை வரை கேப் விடாமல் கொட்டி தீர்த்தது.

இந்த கனமழை காரணமாக ஒட்டுமொத்த சென்னை நகரும் முடங்கிப் போனது. இந்தளவுக்கு ஒரு கனமழை இருக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. இதனால் சென்னையில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்திலும் நீர் தேங்கின.
மோசமான பாதிப்பு: மழை நின்ற பிறகே நேற்று காலை முதல் மீட்புப் பணிகள் நடைபெற்றது. முதற்கட்டமாக நேற்றைய தினம் முக்கிய பகுதிகளில் மழை நீர் வடிய நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், அங்கே போக்குவரத்தும் மெல்லச் சீராக ஆரம்பித்தது. இன்று மாலைக்குள் மற்ற பகுதிகளிலும் மழை நீர் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிப்பு மோசமாக இருந்தது.
இதற்கிடையே தமிழ்நாட்டில் 'மிக்ஜாம்' புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களைச் சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங்கிடக் கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அன்று கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் கடிதம்: இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் கடந்த 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாக்கிய 'மிக்ஜாம்' புயல் காரணமாகப் பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக அதிகமான மழைப்பொழிவு பெறப்பட்டது. இதன் காரணமாக இந்த நான்கு மாவட்டங்களில், குறிப்பாகச் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மிகக்கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன. மேலும், லட்சக் கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது இவற்றையெல்லாம் விளக்கமாகக் குறிப்பிட்டு தமிழ்நாட்டிற்கு இடைக்கால நிவாரணமாகக் குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் ரூ 5,060 கோடியினை உடனடியாக வழங்கிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
கூடுதல் நிதி: மேலும், 'மிக்ஜாம்' புயலால் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட சேதங்களைக் கணக்கிடும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது என்றும் முழு விவரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர், விரிவான சேத அறிக்கை தயார் செய்யப்பட்டு, கூடுதல் நிதி கோரப்படும் என்றும் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட ஒன்றிய அரசின் குழுவினை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்" என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications