தூத்துக்குடியில் ஆரம்பித்த கனமழை! தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம்.. ஆட்சியர் சொன்ன மிக முக்கிய தகவல்
தூத்துக்குடி: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாகத் தென் மாவட்டங்களில் தொடர்ச்சியாக நல்ல மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
பருவமழை சீசன் தொடங்கியது முதலே தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பியுள்ளது.

மழை: கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருந்தது. அது சமீபத்தில் தான் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று இருந்தது. இதனால் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகத் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலாட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மாநிலத்தில் பரவலாக மழை தொடங்கிவிட்டது. குறிப்பாகத் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மாலை நேரத்திலேயே வானில் இருள் சூழ்ந்து கனமழை பெய்து வருகிறது. ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு எடுக்கப்பட்டுள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
ஆட்சியர் இளம் பகவத்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் இளம் பகவத், "தூத்துக்குடி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு, மழை எச்சரிக்கை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டம் முழுவதும் கடற்கரை கிராமங்களில் 41 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 3000 முதல் நிலை பொறுப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொதுமக்கள் பாதுகாப்பாகத் தங்க வைப்பதற்காக 97 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மிக முக்கிய தகவல்: தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கூடாது கால்நடைகளையும் ஆற்றில் இறங்கக்கூடாது என வருவாய்த் துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது. வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டுக் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
எச்சரிக்கை: மேலும் அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருப்பதாகவும் தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 639 குளங்களில் 32 குளங்கள் 70% நிரம்பியுள்ள நிலையில், ஒட்டப்பிடாரம் பகுதியில் இரண்டு குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளது. குளங்களுக்கு வரும் நீரின் வரத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தாழ்வான பகுதிகளில் இருப்பவர்களை முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications