Cyclone Ditwah: டாட்டா காட்டிய டிட்வா! சென்னையை ஏமாற்றி போக்கு காட்டிய புயல்! இப்போ எங்கே இருக்கு?
சென்னை: வறண்ட காற்று ஊடுருவியதால் வடதமிழக கடலோர பகுதிக்கு வரும் போது டிட்வா புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால் வடதமிழக மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட அதி கனமழை எச்சரிக்கை நீர்த்து போனது.
தென்மேற்கு வங்கக் கடலில் தாழ்வு பகுதியாக உருவாகி இலங்கையையொட்டிய பகுதிகளில் புயலாக வலுப்பெற்றது. இதற்கு டிட்வா என பெயரிடப்பட்டது. இந்த புயல் கடந்த மாதம் நவம்பர் 27ஆம் தேதி முதல் 2 நாட்களுக்கு இலங்கையில் அதி கனமழையை கொடுத்து அந்த நாட்டையே புரட்டி போட்டது.

இலங்கை முழுவதும் வெள்ளக்காடாக இப்போதும் காட்சியளிக்கிறது. ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அங்கு 200-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். இலங்கையில் டிட்வா புயல் நல்ல மழையை கொடுத்துவிட்டது.
அங்கு பொதுச் சேதத்தையும் உருவாக்கிவிட்டு 28ஆம் தேதி தமிழக கடலோர பகுதிகளை நோக்கி பயணித்தது. இதனால் ராமேஸ்வரம், ராமநாதபுரம், காவிரி டெல்டா பகுதிகளிலும் தென் மாவட்டங்களிலும் கனமழையை கொடுத்தது.
காவிரி டெல்டாவில் அதிகனமழையை கொடுத்தது. இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி அந்த புயலானது சென்னை, அதையொட்டி வடகடலோர பகுதிகளுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போது வறண்ட காற்று ஊடுருவல் புயலின் மையப்பகுதியில் குறுக்கிட்டது, ஈரப்பதத்துடன் கூடிய காற்று இல்லாமல் போய்விட்டது.
இதனால் மழையை தருவதற்கான மேகக் குவியல்களை அந்த புயலால் உருவாக்க முடியவில்லை. புயலின் முன்பகுதியிலும் பின் பகுதியிலும் மேகக் கூட்டங்கள் இருந்தாலும் அது மழையை கொடுக்கும் அளவுக்கு ஈரப்பதத்தை பெற முடியாத சூழலும் ஏற்பட்டது.
டிட்வா புயலால் காற்றால் ஏற்படும் பாதிப்பு இருக்காது என்றும் மழையை மட்டுமே கொடுக்கும் என்றும் சொல்லப்பட்டது. இதனால் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் குறைந்திருந்த மழையின் அளவை ஈடுகட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது ஏமாற்றத்தை தந்தது.
வறண்ட காற்று மட்டும் குறுக்கே வராமல் இருந்திருந்தால் அந்த புயல் தனது பாதையில் பயணித்திருக்கும். இதனால் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் நல்ல மழையை கொடுத்திருக்கும். ஆனால் இந்த டிட்வா நல்ல மழையை கொடுக்கவில்லை.
டிட்வா புயல் நேற்று இரவு வரை வலுவிழக்காமல் தமிழக கடலோர பகுதிகளுக்கு வந்தது. ஆனால் மேக கூட்டங்கள் இல்லாததால் மழையை கொடுக்க முடியவில்லை. தற்போது இந்த புயல், ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுவிழந்தது.
இது இன்று பிற்பகல் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 90 கி.மீ. தொலைவிலும், கடலூர் , காரைக்காலுக்கு 90 கி.மீ. தொலைவிலும், வேதாரண்யத்திற்கு 180 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 140 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.
டிட்வா புயல் கரையை கடக்காமல் கடலோர பகுதிகள் வழியாக சென்று வலுவிழந்தாலும் சென்னை அல்லது நெல்லூர் அருகே தாழ்வு மண்டலமாகவோ தாழ்வு பகுதியாகவோ நிலை கொள்ள வாய்ப்புள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
டிசம்பர் 3ஆவது வாரத்தில் மீண்டும் பருவமழை தீவிரமடையும், 4ஆவது வாரம் தொடக்கத்தில் மீண்டும் ஒரு புயல் உருவாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications