இன்ச் இன்ச்சா நகர்ந்து.. இடியை இறக்கும் டிட்வா புயல்.. 3 கிமீ வேகத்தில்.. சென்னைக்கு அருகே சம்பவம்!
சென்னை: வங்கக்கடலில் சென்னைக்கு அருகே கரையை கடக்க தொடங்கி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக மெதுவாக நகர்ந்து வருகிறது. இது மணிக்கு 3 கி.மீ வேகத்தில் தெற்கு தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்கிறது.
சென்னைக்கு 100 கி.மீ தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் ஒரு பகுதி ஏற்கனவே தரைப்பகுதிக்கு வந்துவிட்டது. அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறையக்கூடும்.

மழை விவரம்
நேற்று இரவு சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு மழை பெய்தது. அதிகாலையில் 1-2 மணி நேரம் விடாமல் மழை பெய்தது. ஆனாலும் அங்கு தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது.
இப்போது அதிகாலையில் இருந்து பல இடங்களில் இருந்து மீண்டும் விடாமல் மழை பெய்து வருகிறது. இன்று தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை மாவட்டங்களில் சில இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
நாளையும் சென்னையில் மழை தொடரும். அதேபோல் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
டிட்வா புயல் மெதுவாக நகர்கிறது
டிட்வா புயல் வலிமை இழந்து ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. ஆனால் இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மிக மெதுவாக தமிழகக் கடலோரத்தில் நகர்ந்து வருகிறது. முக்கியமாக வங்கக்கடலில் சென்னைக்கு அருகே இதன் பாதி பகுதி நிற்பதால் இந்த தாழ்வு மண்டலம் கடுமையான மழையை கொடுக்கிறது.
சென்னை மற்றும் அதன் கரையோரப் பகுதிகளில் கனமழை விடாமல் பெய்து வருகிறது. இந்த தாழ்வு மண்டல அமைப்பின் மெதுவான நகர்வால், வலுவான மழை மேகங்கள் மீண்டும் மீண்டும் நகரை நோக்கி வருகிறது, இதுவே அதிகாலை முதல் தொடர் மழையைக் கொண்டுவந்ததாக வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதாவது தாழ்வு மண்டலம் அருகிலேயே இருந்தபடி .. மழை மேகங்களை சென்னையை நோக்கி நகர்த்தி வருகிறது.
வங்கக்கடலில் என்ன நடக்கிறது?
இந்த புயல் வலிமை இழந்துவிட்ட பின்பும் ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டு உள்ளது. அடுத்த 7-8 மணி நேரத்திற்கு தொடர்ந்து இப்படியே சென்னைக்கு அருகிலேயே அது நகர்ந்து கொண்டே இருக்கும். இதுதான் மழை பெய்ய முதல் காரணம். பொதுவாக ஒரு தாழ்வு மண்டலம் வலிமை இழக்காமல் இருக்க, கடல் மேல் இருக்கும் வெப்பநிலை 20 டிகிரி செல்சியசுக்கு மேல் இருக்க வேண்டும். தற்போது அந்த சூழல் சரியாக இருந்ததால் இந்த தாழ்வு மண்டலம் வலிமை இழக்காமல் சென்னைக்கு அருகிலேயே அப்படியே இருக்கிறது.
ஆனால் இன்று இது வலிமை இழக்கும். இந்த தாழ்வு மண்டலத்தின் உயரம் முக்கியம். இது சரியாக சென்னையின் வான் பகுதிக்கு அருகிலேயே .. வங்கக்கடல் மேலே இருக்கிறது. அதீத உயரத்தில் இருந்திருந்தால் மேகத்தை இழுத்திருக்காது, மழை பெய்யாது. ஆனால் இதன் உயரம் சரியாக இருப்பதால் மழை மேகங்கள் கூடி அதிக மழையை கொடுக்கிறது.












Click it and Unblock the Notifications